லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியி ல் ஜோஷ் டங்கிற்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சரும், இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ராவும் இடம் பெற்றனர். பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்லி, பென் டக்கெட் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது.
தொடக்க ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ராவும், ஆகாஷ் தீப்பும் அழுத்தம் கொடுத்தனர். எனினும் இந்த ஜோடியை இவர்களால் பிரிக்க முடியவில்லை. பொறுமையாக விளையாடிய பென் டக்கெட் 40 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் நித்திஷ் குமார் ரெட்டி பந்தில் ஆட்டமிழந்தார். லெக் திசையில் நித்திஷ் குமார் வீசிய பேக் ஆஃப் தி லென்ந்த் பந்தை. பென் டக்கெட் புல் ஷாட் விளையாட முயன்ற போது மட்டையில் உரசி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு பென் டக்கெட், ஸாக் கிராவ்லி ஜோடி 13.3 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தது.
இதே ஓவரின் கடைசி பந்தில் ஸாக் கிராவ்லி, ரிஷப் பந்த்திடம் பிடி கொடுத்து வெளியேறினார். ஸாக் கிராவ்லி 43 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஜோ ரூட், ஆலி போப்புடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். ஜோ ரூட் 102 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 67-வது அரை சதத்தை கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு 211 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார்.
ஆலி போப் 104 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஐடேஜா பந்தில் பதிலி விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார்.
முதல் நாள் ஆட்ட முடிவின் போது 83 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இருவரும் இணைந்து 79 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.