பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆர்சிபி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். ஆர்சிபி அணிக்காக ஜேக்கப் பெத்தல் மற்றும் விராட் கோலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் மிடில் ஓவர்களில் ரன் சேர்க்க தடுமாறினர். இருப்பினும் கடைசி இரண்டு ஓவர்களில் 54 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடி பேட்டிங் அதற்கு காரணமாக அமைந்தது. 14 பந்துகளில் 53 ரன்களை அவர் விளாசினார். 4 ஃபோர் மற்றும் 6 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்து பந்துகளில் பதிவு செய்யப்பட்ட அரை சதங்களில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற 214 ரன்கள் தேவை.