இந்திய அணி நேற்று மீண்டும் பேட்டிங் பிட்சில் தவறுகள் இழைத்து, பெரிய ஸ்கோரை எடுத்து இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புகளைத் தடுக்கும் உத்திகளை விரயம் செய்ததாகவே தெரிகிறது.
ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ராகுல், கருண் நாயர் செய்த தவறுகளை ஷுப்மன் கில் ஈடுகட்டினார். அவர் 216 பந்துகளில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்காக 99 ரன்களைச் சேர்த்து ஓரளவுக்கு மீட்டுள்ளனர். ஆனால், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறதா, தோல்வியைத் தவிர்க்க முடியுமா என்பது கேள்வியே.
இது முழுக்க முழுக்க பேட்டிங் பிட்ச். ஸ்பின்னுக்கும் வேலையில்லை. சாதுரியமான களவியூகம் பேட்டர்களை ஆசைக் காட்டி, ஒர்க் அவுட் செய்து வசீகர வலையை விரித்து சோதித்து வீழ்த்தும் களவியூகம், பந்து வீச்சு, கேப்டன்சி இந்த டெஸ்ட்டில் மிக முக்கியம், அந்த விதத்தில் பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சி உண்மையில் கற்பனைத்திறன் மிக்கதாக உள்ளது. மிகச் சரியாக அவர் ஜெய்ஸ்வாலை தன் சொந்த பந்து வீச்சிலும் ரிஷப் பந்த்தை மிட் ஆன், லாங் ஆன் இரண்டையும் நிறுத்தி வலையில் சிக்க வைத்து வீட்டுக்கு அனுப்பினார்.
முதலில் கே.எல்.ராகுல் நேற்று கிறிஸ் வோக்ஸிடம் கொஞ்சம் திணறவே செய்தார். வோக்ஸ் ராகுலிடம் நிறைய கேள்விகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்தார். ஆனால் அவுட் ஆன பந்து சாதாரண பந்துதான். பந்து ஷார்ட் பிட்ச், உள்ளே வருகிறது. அதன் பவுன்சை நம்பி அதை ஆடாமல் விட்டிருக்கலாம்; ஆனால் பந்து ஸ்டம்பைத் தாக்கி விடுமோ என்று பயந்து, அதாவது கணிப்பில் தோல்வி அடைந்து அதை ஆட மட்டையைத் தாமதமாகக் கொண்டு வந்து வலது கை அழுத்தத்தையும் விடுவித்ததால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பில் இறங்கியது.
கருண் நாயர் நன்றாகவே ஆடினார். ஆனால் சில வேளைகளில் இதுபோன்ற பந்துகளை சில வீரர்கள் எதிர்பாராமல் இருப்பார்கள். எல்லோரும் சச்சின் டெண்டுல்கராக முடியாது. கார்ஸ் வீசிய அந்தப் பந்துக்கு கருண் நாயர் முன்னாலும் வரவில்லை, அது சரிதான் ஏனெனில் கமிட் ஆகக் கூடாது, சரி பின்னால் கால்களை நகர்த்தியிருக்க வேண்டாமால் அதுவும் செய்ய வில்லை. இதனால் லெந்த்திலிருந்து எகிறிய கார்ஸின் பந்து மட்டையை அதுபாட்டுக்குத் தட்டிச் சென்றது, கருண் நாயார் வாளாயிருக்க வேண்டியதாயிற்று.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவின் இப்போதைய சிறந்த டாப் ஆர்டர் பேட்டர். 87 ரன்களை பிரமாதமாக எடுத்தார். இதில் ஆக்ரோஷமும் எச்சரிக்கையும் கலந்திருந்தது, ஆனால், ரஷ் ஆஃப் பிளட் என்பார்களே அதற்கு பென் ஸ்டோக்ஸ் அவரை இசைய வைத்தார் என்பதுதான் உண்மை.
ஒரு சுவாரஸ்யமான கிரிக் இன்போ புள்ளி விவரம் என்னவெனில், இதுவரை தன் கரியரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் 94 முறை கட் ஷாட்களை ஆடியுள்ளார். இதில் பாதிக்கும் மேல் அவர் சரியாக ஆடவில்லை அல்லது பந்தை முற்றிலும் இழந்திருக்கிறார். நேற்றும் வைடு பந்துகளை கட் ஷாட் ஆட முயன்று சில முறை அதிர்ஷ்டவசமாகத் தப்பித்திருந்தார் ஜெய்ஸ்வால்.
இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் விடாமுயற்சியின் மறுபெயர். அந்தப் பந்தை முயன்று கொண்டே இருந்தார். எல்லா சமயமும் பந்தின் மீது மட்டையை வீசுவது எட்ஜ் எடுத்து ஸ்லிப் பீல்டர்களைத் தவிர்த்து சென்று விடாது, இந்த முறை உண்மையில் ஒரு பவுண்டரி பால்தான், ஆனால் ஜெய்ஸ்வால் தன் பேட்டிங் பலவீனம் அறியாமல் அதை வென்றெடுக்க ஷாட் ஆடப்போய் எட்ஜ் ஆகி வெளியேறினார், ஸ்டோக்ஸ் கொண்டாடியதைப் பார்க்கும் போது இதை திட்டமிட்டிருந்தார் என்பது புரிந்தது.
இத்தனைக்கும் ஜெய்ஸ்வாலின் பலவீனம் லெக் சைடுதான். அங்கு வீசி வீசி அவரை பலமாக்குவதை விட அவரது பலத்தைக் குறிவைத்து தவறிழைக்க வைத்தால் அவர் பலம் மீதே அவருக்கு ஒரு ஐயம் ஏற்பட்டு விடும், இதுதான் பென்ஸ்டோக்ஸின் ஜீனியஸ்.
கோட்டை விட்ட ரிஷப் பந்த்: ஷோயப் பஷீர் குறித்த இந்திய நிபுணர்கள், அல்லது ஓரளவுக்குக் கிரிக்கெட் தெரிந்தவர்களின் பார்வை என்னவெனில், பவுண்டரி கேட்சை விட்டால் ஷோயப் பஷீர் விக்கெட்டே வீழ்த்த முடியாது என்று கேலி பேசிவந்தனர். ரிஷப் பந்த் பொதுவாக களவியூகத்தைப் பெரிதாக மதிப்பவர் அல்ல, தன் பவரை நம்புபவர். இது அவரது பலம். இதையும் நேற்று பென் ஸ்டோக்ஸ் பலவீனமாக மாற்றினார்.
ஷோயப் பஷீரை ரிஷப் பந்திடம் கொண்டு வருவது பெரிய ரிஸ்க். ஆனால் அவர் அந்த ரிஸ்க்கைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன் பவுலரை நம்பினார். நம் கம்பீர் – ஷுப்மன் கில் போல் ஷர்துல் தாக்கூரை எடுத்தும் நம்பாமல் சர்பராஸ் கான், குல்தீப் யாதவ்வை எடுப்பதற்குக் கூட நம்பாமல் இருப்பவர் அல்ல ஸ்டோக்ஸ்.
ரிஷப் பந்த் மிட் ஆன் ஃபீல்டருக்கு நேராக ஒரு கோணத்தில் லாங் ஆன் ஃபீல்டர் நின்றதை கவனிக்காமல் இருந்திருக்கவே அதிக வாய்ப்பு. ஏனெனில் கவனித்திருந்தால் அப்படி ஆடியிருக்க மாட்டார். ஆனால் அப்படியும் சொல்வதற்கில்லை. அந்த களவியூகத்தை நான் கிண்டல் செய்கிறேன் பார் என்று அவர் தலைக்கு மேல் சிக்ஸ் அடிக்க எண்ணியிருக்கலாம். ஈகோ தலை தூக்கியிருக்கலாம்.
ஃபீல்டரும் லாங் ஆனில் கொஞ்சம் வைடாக நகர்ந்திருந்தார். அதனால் ரிஷப் பந்த் கண்களிலிருந்து மறைந்திருக்கலாம். ரிஷப் பந்த்திற்கு எதிர்காற்று வேறு அடித்துக் கொண்டிருந்தது. பஷீர் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து மிடில் ஸ்டம்புக்கு ஃபுல் லெந்த் பந்தை இறக்கினார். பந்தின் வேகம் 75 கிமீ தான். ரிஷப் பந்த அந்தப் பந்தை நேராக அடிக்காமல் லெக் திசையில் ஆட கிராலி கேட்ச் எடுத்தார். நிற்கவைத்து அமைக்கப்பட்ட பொறியில் பண்ட்டும் வீழ்ந்தார்.
இந்திய அணியின் டாப் ஆர்டரில் இரண்டு ஆக்ரோஷ வீரர்களை எப்படி சாதுரியமாக பிட்சின் உதவியில்லாமல் தன் மூளையின் வியூக உதவியுடன் பென் ஸ்டோக்ஸ் காய் நகர்த்தி செஸ் ஆட்டத்தில் வெல்வது போல் வீழ்த்தினார் என்பது கிரிக்கெட் ஆட்டத்தின் அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டின் நுணுக்க சிறப்புகளின் சீரிய வெளிப்பாட்டு எடுத்துக்காட்டுகளாகும்.