ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழக அணியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியைச் சேர்ந்த வீரர் இடம் பிடித்துள்ளார்.
திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் இ.பி காலனியைச் சேர்ந்தவர் ஆர்.ஜெகநாதன்- ஜெ.பிருந்தா தம்பதியின் மகன் ஹேம்சுதேசன் (17). திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். 4 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் இவர், திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க அணியிலும், தமிழக அணியில் இடம் பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்த ரஞ்சி கிரிக்கெட் அணியில் கேப்டன் ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணியில் ஹேம் சுதேசன் இடம் பிடித்துள்ளார்.
திருச்சியில் இதற்கு முன், ஆர்.எம்.பெருமாள், புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.விஜயரகுநாத தொண்டைமான், எஸ்.கல்யாணம், கே.சிவகுமார், எஸ்.சந்திரமவுலி, ஆர்.சதீஷ் ஆகியோர் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி உள்ளனர். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பின் திருச்சியிலிருந்து தற்போது ஹேம்சுதேசன் தேர்வாகி உள்ளது திருச்சி கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, கிரிக்கெட் வீரர் ஹேம்சுதேசன் கூறியது: நான் இந்தளவுக்கு வளர காரணமான எனது பயிற்சியாளர்கள், எனது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ரஞ்சியில் சிறப்பாக ஆடி தமிழக அணிக்கு வலு சேர்ப்பேன். இந்திய அணியில் இடம் பெற்று சிறந்த பவுலர் மற்றும் ஆல்-ரவுண்டராவதே எனது லட்சியம் என்றார்.