மியூனிச்: யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணி கோப்பையைக் கைப்பற்றியது.
ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 36 அணிகள் மோதின. இதில் இறுதிப் போட்டிக்கு, பிஎஸ்ஜி அணியும் இன்டர் மிலன் அணியும் தகுதி பெற்றன.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. இதில் பிஎஸ்ஜி அணி 5-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
பிஎஸ்ஜி அணிக்காக டிசையர் டவ் 20, 63-வது நிமிடங்களில் 2 கோல்களும், அச்ரவ் ஹக்கிமி 12-வது நிமிடத்தில் ஒரு கோலும், கிவிச்சா வரட்ஸ்கீலியா 73-வது நிமிடத்தில் ஒரு கோலும், சென்னி மயுலு 86-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.