துபாய்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்தவாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரை அகமதாபாத்தில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நேற்று இதனை இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். பும்ராவுக்கு போதுமான அளவு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தாத கருண் நாயர் நீக்கப்பட்டுள்ளார். அவர், 8 இன்னிங்ஸில் 205 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு முறை கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்காத மேற்கு வங்க பேட்ஸ்மேன் அபிமன்யு ஈஸ்வரனும் நீக்கப்பட்டுள்ளார்.
கருண் நாயருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த 25 வயதான இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாய் சுதர்சன் 6 இன்னிங்ஸில் 140 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான ரிஷப் பந்த் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக துருவ் ஜூரெல், நாராயண் ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயம் காரணமாக பாதியில் விலகியிருந்த ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி காயத்தில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார். பிரதான சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். பும்ராவுடன் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளனர்.
அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ் வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், நாராயண் ஜெகதீசன், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
முகமது ஷமிக்கு என்னாச்சு? – சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர், கூறும்போது, “முகமது ஷமி குறித்து எந்த தகவலும் இல்லை. அவர், ஓரிரு போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் அவருக்கு அதிக போட்டிகள் இல்லை.
கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில், முகமது ஷமி பெங்கால் அணிக்காக ஒரு போட்டியிலும், துலீப் டிராபியில் ஒரு போட்டியிலும் மட்டுமே விளையாடியுள்ளார்” என்றார்.
ரிஷப் பந்த் எப்போது திரும்புவார்? – இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கர் கூறும்போது, “ரிஷப் தற்போது அணியின் துணை கேப்டனாகவும், முக்கிய வீரராகவும் உள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வகையில் அவர், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
தென் ஆப்பிரிக்க அணி நவம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் நவம்பர் 14 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது.