அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதையடுத்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 100, துருவ் ஜூரல் 125, ரவீந்திர ஜடேஜா 104 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி தனது முந்தைய நாள் ஸ்கோரான 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் என்ற நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி 286 ரன்கள் பின்னிலைபெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
ஜான் கேம்பெல், டேக்நரைன் சந்தர்பால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்ஸைப் போலவே 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் ஆடுகளத்துக்கு வருவதும், ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்புவதுமாக இருந்தனர். கேம்ப்பெல் 14 ரன்களும், சந்தர்பால் 8 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து விளையாட வந்தவர்களில் அலிக் அத்தனாஸ் 38, ஜஸ்டின் கிரீவ்ஸ் 25, ஜான் லேன் 14, ஜெய்டன் சீல்ஸ் 22 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 45.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 3, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இரண்டரை நாள்: 5 நாள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி இரண்டரை நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தின்போது முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 2-வது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கே சுருண்டது. டெஸ்ட் போட்டியில் அனுபவம் குறைந்த வீரர்களுடன் வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சையும், சுழற்பந்துவீச்சையும் தாக்குப் பிடிக்க முடியாமல் சரணடைந்தனர். பேட்டிங்கின்போது சிறப்பாக விளையாடி 104 ரன்களைக் குவித்ததோடு, 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்களைக் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
2-வது டெஸ்ட்: இந்தத் தொடரில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.