துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை.
மேலும் டாஸின்போது இரு அணிகளின் கேப்டன்களுமே தங்களின் விளையாடும் லெவன் பட்டியலை பரஸ்பரம் பகிரும் நிலையில், அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவும், சல்மான் அலி ஆகா இருவருமே மேட்ச் ரெஃப்ரீயான ஆண்டி பைகிராஃப்டிடமே பட்டியலை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, ஆட்டத்தின் முடிவிலும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.
இந்த விவகாரம் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதற்கு பொறுப்பாக ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்தது. மேலும் இந்த விவகாரத்தை ஐசிசியிடமும் முறையிட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
ஆண்டி பைஃகிராப்ட் நீக்கப்பட மாட்டார் எனவும், உங்களது மனு நிராகரிக்கப்படுகிறது எனவும் ஐசிசி-யிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
69 வயதான ஜிம்பாப்வேயை சேர்ந்த ஆண்டி பைஃகிராப்ட் ஆசிய கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டத்தில் மேட்ச் ரெஃப்ரீயாக செயல்பட உள்ளார். ஐசிசி எலைட் பேனலின் போட்டி நடுவர்களில் சீனியரான பைக்ராஃப்ட், 695 சர்வதேச ஆட்டங்களில் பணியாற்றி உள்ளார்.
இதற்கிடையே போட்டியின் போது பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து கேப்டன் சல்மான் அலி ஆகாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநர் உஸ்மான் வால்ஹா எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் உஸ்மான் வால்ஹாவை பதவி நீக்கம் செய்ய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.