மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் இந்திய பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே.
37 வயதான ரஹானே 201 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் மும்பை அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் எனவும் ரஹானே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஹானே தனது எக்ஸ் வலைதள பதிவில், “மும்பை அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டங்கள் வென்றது பெரிய கவுரவம். உள்ளூர் சீசன் வரவிருக்கும் நிலையில், புதிய கேப்டனை தேர்வு செய்ய இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன், எனவே, கேப்டன் பதவியில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
ஒரு வீரராக எனது சிறந்த பங்களிப்பை வழங்குவதில் நான் முழுமையாக உறுதியாக இருக்கிறேன். மேலும் பல கோப்பைகளை வெல்ல உதவுவதற்காக மும்பை அணியுடன் ‘எனது பயணத்தைத் தொடருவேன். வரவிருக்கும் சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை சீசன் வரும் அக்டோபர் 15-ல் தொடங்குகிறது. மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.
ரஹானே தலைமையில் மும்பை அணி 2023–24–ம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. மேலும் 2024–25–ம் ஆண்டில் இரானி கோப்பையை வென்ற மும்பை அணியையும் ரஹானே சிறப்பாக வழிநடத்தியிருந்தார். 2022–23–ம் ஆண்டில் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி டி 20 தொடரிலும் ரஹானே தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
2021-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில் ரஹானேவின் கேப்டன்ஷிப் முக்கிய பங்கு வகித்திருந்தது. ஆனால் தற்போது அவர், தேசிய தேர்வாளர்களின் பார்வையில் இல்லை. எனினும், இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதில் ரஹானே உறுதியாக உள்ளார்.
இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ரஹானே, கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருந்தார். 90 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 டி20 ஆட்டங்களிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார் ரஹானே.