மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷோயிப் பஷிருக்கு பதிலாக லியாம் டாவ்சன் இடம் பெற்றார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கருண் நாயர் நீக்கப்பட்டு சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டார்.
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ள நித்திஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டார். மேலும் ஆகாஷ் தீப்புக்கு மாற்றாக அன்ஷுல் கம்போஜ் இடம் பெற்றார். 24 வயதான அன்ஷுல் கம்போஜுக்கு இது அறிமுக போட்டியாக அமைந்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஒரு மணி நேரம் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தல் கொடுத்தனர்.
குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் தனது எட்டு ஓவர் ஸ்பெல்லில் அற்புதமாக பந்து வீசினார். சரியான திசையில் பந்துகளை வீசி எகிற செய்து கே.எல்.ராகுலையும், ஜெய்ஸ்வாலையும் சோதித்தார். எனினும் இந்திய ஜோடி பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் வீசிய 25-வது ஓவரின் 5-வது பந்தை ஜெய்ஸ்வால், தேர்டு மேன் திசையில் சிக்ஸர் அடித்தார்.
மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் சேர்த்திருந்தது. கே.எல்.ராகுல் 40, ஜெய்ஸ்வால் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். பொறுமையாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 98 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் 3-வது சிலிப் திசையில் நின்ற ஸாக் கிராவ்லியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி 30 ஓவர்களில் 94 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சாய் சுதர்சன் களமிறங்கினார்.
நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 96 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது அவருக்கு 12-வது அரை சதமாக அமைந்தது. சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 107 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு களமிறங்கிய லியாம் டாவ்சனின் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே லியாம் டாவ்சன் வீசிய பந்தை ஜெஸ்வால் தடுப்பாட்டம் மேற்கொண்ட போது பந்து மட்டை விளிம்பில் பட்டு சிலிப் திசையில் நின்ற ஹாரி புரூக்கிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் 23 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் ஆஃப் ஸ்டெம்புக்கு வீசிய பந்தை ஷுப்மன் கில் தவறாக கணித்து மட்டையை கொண்டு விளையாடாமல் முன்னங்காலை கொண்டு சென்றார். பந்து கால்காப்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் செல்ல இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்ததும் நடுவர் அவுட் கொடுத்தார். ஷுப்மன் கில் மேல்முறையீடு செய்த போதிலும் பலன் இல்லாமல் போனது.
140 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சாய் சுதர்சனுடன் இணைந்தார் ரிஷப் பந்த். தேநீர் இடைவேளையில் இந்திய அணி 52 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 3 ரன்களும், சாய் சுதர்சன் 26 ரன்களும் சேர்த்திருந்தனர்.
தேநீர் இடைவேளைக்கு பின்னர் இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். வோக்ஸ் வீசிய முதல் இன்னிங்ஸின் 68-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார் ரிஷப் பந்த். அது அவரது வலது காலில் பட்டது. இங்கிலாந்து அணி ரிவ்யூ செய்ததில் பந்து முதலில் பேட்டில் பட்டது தெரியவந்தது. ரிஷப் பந்த் வலியால் துடித்தார். அவரது வலது கால் பகுதி வீக்கம் அடைந்தது. தொடர்ந்து ரிட்டயர்ட் ஹெர்ட் முறையில் அவர் களத்தில் இருந்து வெளியேறினார். அவரால் நடக்க முடியாத காரணத்தால் வாகனம் மூலம் வெளியேறினார்.
சாய் சுதர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார். அவர் 151 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 83 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்துல் தாக்குர் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆர்ச்சரை தவிர்த்த ஜெய்ஸ்வால்: லார்ட்ஸில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்திருந்தார். இந்நிலையில் மான்செஸ்டரில் நேற்று தொடங்கிய 4-வது டெஸ்டில் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துகளை எதிர்கொள்வதை ஜெய்ஸ்வால் தவிர்த்தார். ஜோப்ரா ஆர்ச்சர் தனது முதல் ஸ்பெல்லில் 5 ஓவர்களை வீசிய நிலையில் ஜெய்ஸ்வால் வெறும் 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். 25 பந்துகளை கே.எல்.ராகுல் சந்தித்தார்.
1,000 ஆயிரம் ரன்கள்: இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்கள் குவித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 11 ரன்களை சேர்த்திருந்த போது இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த வகையில் இந்திய வீரர்களில் இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோரும் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தனர். இங்கிலாந்தில் தனது 13-வது டெஸ்ட் போட்டியை விளையாடி வரும் கே.எல்.ராகுல் 4 சதங்களும், 2 அரை சதங்களும் அடித்துள்ளார்.
தப்பித்த சாய் சுதர்சன்: சாய் சுதர்சன் 20 ரன்களில் இருந்த போது பென் ஸ்டோக்ஸ் பந்தில் லெக் திசையில் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறவிட்டார்.
உடைந்த பேட்: இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் வீசிய 9-வது ஓவரின் 5-வது பந்தில் ஜெய்ஸ்வால் தற்காப்பு ஆட்டம் மேற்கொண்டார். அப்போது பந்து மட்டையின் கைப்பிடியில் பலமாக பட்டு உடைந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.