சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
குரூப் ‘பி’ போட்டிகள் திண்டுக்கலில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்பந்து சங்கம் தலைவர் சண்முகம், திண்டுக்கல் மாவட்ட பயிற்சி கலெக்டர் சி.வினோதினி பார்த்திபன், பார்வதி குழுமத்தின் என்.தர், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.ரமேஷ் படேல், மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் 9-0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணியை தோற்கடித்தது. பிரதிக்சா 5, ஆனந்த் 2, நயனா, காவ்யா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். 2-வது ஆட்டத்தில் திருவள்ளூர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் தேனி அணியை வீழ்த்தியது. கோபிகா, சங்கீதா ஆகியோர் தலா 2 கோல்களும், கிறிஸ்டி ஒரு கோலும் அடித்தனர். அடுத்த ஆட்டத்தில் திருவாரூர் அணி 24-0 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியை தோற்கடித்தது.
குரூப் ‘ஏ’ போட்டிகள் செயின்ட்ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றன. போட்டிகளை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் சூசைராஜ் முன்னிலையில் கல்லூரி தாளாளர் பீட்டர்ராஜ் தொடங்கி வைத்தார்.
முதல் ஆட்டத்தில் நீலகிரி அணி 6-0 என்ற கோல் கணக்கில் ராம்நாடு அணியை வீழ்த்தியது. கனிஷ்மா 3, விகாஷினி 2, பூர்விகா ஒரு கோல் அடித்தனர். 2-வது ஆட்டத்தில் ஈரோடு 15-0 என்ற கோல் கணக்கில் சிவகங்கை அணியை தோற்கடித்தது. பிரதிஷா 4 கோல்களும், சுபிக்சா 3 கோல்களும் மோனிகா, பிரபா, அமிர்தவர்ஷினி ஆகியோர் தலா 2 கோல்களும் ரிதுனிதா, சுபத்ரா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். 3-வது ஆட்டத்தில் சேலம் 19-0 என்ற கோல் கணக்கில் விருதுநகரை வென்றது. சென்னை அணி 4-0 என்ற கணக்கில் நீலகிரியை தோற்கடித்தது.