சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று அசத்தியது இந்திய கிரிக்கெட் அணி. ஆட்டத்தில் வெற்றி சாத்தியமில்லை என்ற தருணத்தில் இருந்து அதை அசாத்திய வெற்றியாக இந்தியா மாற்றி இருந்தது.
அது இந்திய அணிக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த ஐசிசி கோப்பையாக அமைந்தது. அந்தப் போட்டியின் வெற்றித் தருணங்களை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வாகை சூடியது எப்படி என்பதை பார்ப்போம்.
இது இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகளில் ஒன்று என சொல்லி அப்படியே கடந்து சென்று விட முடியாது. பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஆண்டு இதே நாளான ஜூன் 29-ம் தேதி இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. 2007-ல் இளம் வீரராக டி20 உலகக் கோப்பை பட்டம் வென்ற ரோஹித், 17 ஆண்டுகளுக்கு பிறகு அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டி, அரையிறுதி என இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் ஹார்ட்பிரேக் மற்றும் எஞ்சியது. அதனால் பார்படோஸில் இந்திய அணியின் வெற்றி மகத்தானது மற்றும் மறக்க முடியாததும் கூட. சாம்பியன் பட்டம் வென்ற அந்த தருணத்தில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித்தும் கோலியும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அப்போது இருந்த ராகுல் திராவிடும் தனது பொறுப்பில் இருந்து விடைபெற்றார்.
இந்தியா வாகை சூடியது எப்படி? – இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரோஹித், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் அக்சர் படேலும் விராட் கோலியும் இணைந்து 72 ரன்கள் கூட்டணி அமைத்தனர். அது இந்திய அணிக்கு முக்கியமானதாக அமைந்தது.
31 பந்துகளில் 47 ரன்கள் விளாசி இருந்தார் அக்சர். அவரது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள் அடங்கும். விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார். 6 ஃபோர்கள், 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 19-வது ஓவரில் கோலி ஆட்டமிழந்தார். ஷிவம் துபே, 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது இந்தியா.
தென் ஆப்பிரிக்கா விரட்டல்: இரண்டாவது இன்னிங்ஸில் 14-வது ஓவர் வரை ஆட்டத்தில் வெல்லும் வாய்ப்பு இரு அணிக்கு சமமாகவே இருந்தது. கடைசி 6 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அக்சர் வீசிய 15-வது ஓவரில் 24 ரன்கள் கொடுத்தார். கிளாசன் 23 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
வெற்றியை தட்டிப்பறித்த இந்தியா: கடைசி 5 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. களத்தில் கிளாசன் மற்றும் மில்லர் இருந்தனர். அதனால் தென் ஆப்பிரிக்கா சுலப வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
பும்ரா வீசிய 16-வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரில் கிளாசன் விக்கெட்டை கைப்பற்றினார் ஹர்திக். அதன் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான ஹர்திக், பும்ரா, அர்ஷ்தீப் என மூவரும் சிறப்பாக பந்துவீசினர். யான்சன், டேவிட் மில்லர், ரபாடா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சூர்யகுமாரின் சூப்பர் கேட்ச்: கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஹர்திக் வீசி இருந்தார். முதல் பந்தில் மில்லர் பெரிய ஷாட் ஆட முயன்று பந்தை விளாசி இருந்தார். பவுண்டரி லைனுக்கு உள்ளே வெளியே சென்று அதை கேட்ச் செய்திருந்தார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். அது இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் இந்திய அணி 7 ரன்களில் வெற்றி பெற்றது அசத்தி இருந்தது.