மும்பை: புரோ கபடி 12-வது சீசன் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் இம்முறை விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறுகின்றன.
புரோ கபடி லீக்கின் 2025-ம் ஆண்டு சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 வரை விசகாப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு விசாகப்பட்டினத்துக்கு புரோ கபடி லீக் போட்டிகள் திரும்பி உள்ளன. இங்கு கடைசியாக 2018-ம் ஆண்டு 6-வது சீசன் போட்டிகள் நடைபெற்றன.
29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸை எதிர்கொள்கிறது. அன்றைய தினம் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி புனேரி பால்டனை சந்திக்கிறது. 30-ம் தேதி தெலுகு டைட்டன்ஸ் அணி, யுபி யோதாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அன்றைய தினம் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் யு மும்பா, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதேவேளையில் 31-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி, யு மும்பாவுடன் மல்லுக்கட்ட உள்ளது. அன்றைய தினம் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதைத் தொடர்ந்து 2-வது கட்ட போட்டிகள் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. லீக்கின் 3-வது கட்ட போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறுகிறது. அன்றைய தினம் நடைபெறும் முதல் ஆட்டத்தில் யுபி யோதாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி., ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸ் அணி அக்டோபர் 1-ல் யு மும்பாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 3-ம் தேதி ஹரியாணா ஸ்டீலர்ஸ், 5-ம் தேதி பெங்களூரு புல்ஸ், 7-ம் தேதி பாட்னா பைரேட்ஸ், 11-ம் தேதி புனே பைரேட்ஸ் அணிகளுடன் மோதுகிறது தமிழ் தலைவாஸ் அணி. லீக்கின் கடைசி கட்ட போட்டிகள் அக்டோபர் 13 முதல் 21 வரை டெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.