இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் தரத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்தத் தொடரின்போது ஜஸ்பிரீத் பும்ரா விளையாடாத 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது என்ற ரீதியில் செய்திகள் வெளிவந்தன.
இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் நேற்று கூறியது: “ஜஸ்பிரீத் பும்ரா விளையாடாத 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது தற்செயலான நிகழ்வுதான். வர் விளையாட 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறித்து பலர் விவாதித்து வருகின்றனர். இதை பெரிதாக எண்ணக்கூடாது.
அதையும், இதையும் முடிச்சுப் போட்டு பார்ப்பது சரியல்ல. ஜஸ்பிரீத் பும்ராவின் திறமையை நான் நன்றாக அறிவேன். அவரது தரத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
பும்ராவின் தரம் விதிவிலக்கானது. கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகள் நம்ப முடியாதவை. எந்த சந்தேகமும் இல்லாமல் அவர் திறமையான வீரர் என்று சொல்வேன். சிறப்பாக பந்துவீசி இந்திய அணியில் ஒரு நிலையான வீரராக அவர் வலம் வருகிறார். 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னை சிறந்த வீரர் என்று நிரூபித்து வருகிறார். மற்ற எல்லோருடனும் ஒப்பிடும்போது அவரை நான் முதலிடத்தில் வைப்பேன்.
இங்கிலாந்தில் அவர் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் 2 முறை 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன்மூலம் அவரது செயல்பாட்டை நாம் புரிந்துகொள்ள முடியும். அவர் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றியிருக்கிறார். அதை யாரும் மறக்கக்கூடாது.
அதேபோல் வாஷிங்டன் சுந்தர் இந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றி தேர்வாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார். அவர் களத்தில் விளையாடும் போதெல்லாம் அணிக்கு தேவையானதை செய்தார். 4-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றியது திருப்புமுனையாக அமைந்தது.
கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அற்புதமாக விளையாடி 53 ரன்களைக் குவித்தார். அதேபோல் 4-வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜவுடன் இணைந்து சதம் விளாசினார். சபாஷ் வாஷிங்டன் சுந்தர். களத்தில் அவருடைய செயல்பாடு எனக்குப் பிடித்திருந்தது.
4-வது டெஸ்ட் போட்டியின்போது ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஜோடி மிகச்சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. அவர்கள் போட்டியை டிராவில் முடிப்பதற்காக சிறப்பாக விளையாடினர். அந்தப் போட்டியின்போது இந்திய அணி நிர்வாகமும், வீரர்களும் எடுத்த முடிவு சரிதான். போட்டியை முன்னதாகவே முடித்துக் கொள்ள இந்திய அணி ஒப்புக்கொள்ளாதது சரியான முடிவுதான்” என்று சச்சின் கூறினார்.