நேதன் லயன் அவ்வளவு நல்ல ஸ்பின்னர் இல்லை என்று செடேஷ்வர் புஜாராவிடம் 2023 பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கூறியதை அடுத்து, புஜாரா நேதன் லயனை இறங்கி வந்து சிக்ஸ் அடித்த சம்பவத்தை இப்போது ரோஹித் சர்மா நினைவுகூர்ந்து பேசினார்.
‘The Diary of a Cricketer’s Wife’ என்று புஜாரா மனைவி பூஜா எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ரோஹித் சர்மா பேசினார். அப்போது அவர் 2023 பார்டர் கவாஸ்கர் டிராபி 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றபோது எப்படி புஜாரா தன் மெசேஜைக் கேட்டு நேதன் லயனை இறங்கி வந்து மிட் ஆனுக்கு மேல் தூக்கி அடித்தார் என்பதை விளக்கினார்.
2023 இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் நேதன் லயன் பற்றிய கருத்து புஜாராவின் கரியரையே பாதித்தது வேறொரு கதை. ஆனால், இந்த டெஸ்ட்டில் நடந்த ரோஹித் குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பார்ப்போம்:
ஆஸ்திரேலியா இங்கு வந்து டெஸ்ட் தொடரில் 2023-ல் ஆடியபோது, அப்போது ஆஸ்திரேலியா முந்தைய இந்திய தொடர்கள் போல் இல்லாமல் கடுமையாகப் போராடும் கதியில் ஆடினர். இந்திய அணி 2-0 என்று முன்னிலை பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலியா நம்மை எப்போது வேண்டுமானாலும் வீழ்த்தி விடும் என்பதாகவே இந்திய அணியின் ஆட்டம் தடுமாற்றமாகவே இருந்தது. 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்திய அணி 140/7 என்று இரண்டாவது இன்னிங்ஸில் தட்டுத் தடுமாறியது.
அப்போது புஜாராவும் அக்சர் படேலும் எச்சரிக்கையுடன் ஆடினர். அப்போதுதான் ரோஹித் சர்மா, நேதன் லயன் பற்றிய தன் கருத்தைப் பதிலி வீரர் இஷான் கிஷனிடம் சொல்லி களத்திற்கு அனுப்பினார். அதுவரை தடுப்பாட்டத்தை ஆடிய புஜாரா, ரோஹித் அனுப்பிய செய்தியினால் ஊக்கம் பெற்று லயன் பந்தை இறங்கி வந்து லாங் ஆன் மேல் சிக்ஸ் விளாசினார்.
இது ரோஹித் சர்மா முகத்தில் புன்னகையை வரவழைத்தது. ஆனால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்குச் சுருண்டது. லயன் 3 விக்கெட்டுகளையும், குனிமேன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்து 88 ரன்கள் முன்னிலை பெற்றது. 2வது இன்னின்சிலும் கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களில் லயன் பந்தில்தான் எல்.பி.டபிள்யூ ஆனார். புஜாராதான் அரைசதம் கண்டு 59 ரன்கள் எடுத்தார்.
அப்போது தான் அனுப்பிய செய்தி குறித்து ரோஹித் சர்மா நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய போது, “நேதன் லயன் லைன் மற்றும் லெந்த்தை கொஞ்சம் வீழ்த்த வேண்டியிருந்தது. ரன்களை கொஞ்சம் விரைவில் எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். ஏதாவது ஸ்கோரில் டிக்ளேர் செய்யலாம் என்று நினைத்தோம். ஏதாவது ஒரு மாற்றம் இப்போது ஆட்டத்தில் நிகழ வேண்டும் என்று நினைத்தோம்.
நேதன் லயன் மிட் ஆன் பீல்டரை முன்னாலேயே நிற்க வைத்து பெரும்பாலும் பந்து வீசினார். லாங் ஆன் இல்லை. இது எனக்கு ஒரு மாதிரியாக இருக்க, மிட் ஆனை முன்னால் நிறுத்தி வீசும் அளவுக்கு லயன் ஒன்றும் பெரிய பவுலர் இல்லையே என்று எனக்குத் தோன்றியது. சவாலான பிட்ச், பந்துகள் பெரிய அளவில் திரும்பின, அவர் மிட் ஆனை முன்னால் வைத்து சவால் விட்டார். எங்களுக்கும் விரைவு கதியில் ரன்கள் தேவை, உடனே இஷான் கிஷனிடம் செய்தி சொல்லி களத்திற்கு அனுப்பினேன்” என்று புஜாரா லயனை சிக்ஸ் அடித்த சம்பவம் பற்றி விவரித்தார்.
ஆனால், புஜாராசை அவர் பாணியில் ஆட விட்டிருந்தால் அக்சர் படேல் 15 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்ததற்கு இன்னிங்சை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருப்பார் புஜாரா. ஆனால் ரோஹித் சர்மாவின் ‘லயன் பற்றிய கருத்து’, அதாவது லயன் அவ்வளவு நல்ல பவுலர் இல்லை என்ற கருத்தின் பாதிப்பினால் புஜாரா லயனை சிக்ஸ் அடித்தாலும் அவரிடமே லெக் ஸ்லிப்பில் ஸ்மித்தின் அபார டைவிங் கேட்சுக்கு 59 ரன்களில் வெளியேற 140/7-லிருந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேதன் லயன் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு வெறும் 76 ரன்களே டிராவிஸ் ஹெட் வெளுத்துக் கட்ட 78/1 என்று ஆஸ்திரேலியா வென்றது. ஒரு மெசேஜ் முரண் நகையாகப் போய்விட்டது, ஆனால் ரோஹித் இதைப் பற்றிச் சொல்லவில்லை.