சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வந்தது.
இதில் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 567 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 74 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக யாவர் ஹசன் 84 ரன்கள் சேர்த்தார். டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் சார்பில் வித்யுத் 7 விக்கெட்களையும், ஹெம்சுதேஷன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் முன்னிலை பெற்ற டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக வித்யுத் தேர்வானார்.
குருநானக் கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஹரியானா – ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ஹைதராபாத் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 272 ரன்கள் இலக்கை துரத்திய ஹரியானா அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 62.4 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹரியானா அணி சார்பில் நித்தின் சாய் யாதவ் 7 விக்கெட்கள் வீழ்த்தினார். வரும் 6-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.