மும்பை: டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மினாஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ-யின் 94-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ-யின் 37-வது தலைவர் மிதுன் மனாஸ் ஆவார். ரோஜர் பின்னி மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பிறகு பிசிசிஐ-யின் தலைவராகப் பொறுப்பேற்ற மூன்றாவது முதல் தர கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மிதுன் மனாஸ்.
மிதுன் மனாஸ் முதல்தர கிரிக்கெட்டில் 1547 ஆட்டங்கள், லிஸ்ட் ஏ போட்டியில் 130 ஆட்டங்கள், ஐபிஎல் தொடரில் 55 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஜம்மு & காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குறைபாடு காரணமாக, அதன் விவகாரங்களை நிர்வகிக்க பிசிசிஐ அமைத்த மூன்று பேர் கொண்ட தற்காலிகக் குழுவின் இயக்குநராகவும் மிதுன் மனாஸ் பணியாற்றி உள்ளார்.
செயலாளராக தேவஜித் சைகியா, ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு தலைவர் அருண் துமால் ஆகியோர் மீண்டும் தேர்வாகி உள்ளனர். கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவரான ரகுராம் பாத், பொருளாளராக தேர்வாகி உள்ளார். சீனியர் நிர்வாகியான ராஜீவ் சுக்லா, துணை தலைவராக தொடர்கிறார். இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் தேர்வாளர்கள் குழுவில் ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த எஸ்.சரத் ஜூனியர் தேர்வுக்குழுவுக்கு திரும்பி உள்ளார்.