ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டி 5-ம் நாள் வரை வந்து த்ரில் போட்டியாக அமைந்திருப்பது டெஸ்ட் போட்டிக்கான நல்ல ஊக்குவிப்பாகும். ஆனால், இந்திய அணி இந்தப் போட்டியைத் தோற்கும் என்ற நிலையே இப்போதைக்கு ஹெட்டிங்லி பிட்ச் பற்றிய கணிப்பில் தெரிய வருகிறது. மேலும் 4-வது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய இலக்கானாலும் விரட்டுவோம் என்பதில் இங்கிலாந்தின் புதிய பாஸ்பால் அணுகுமுறை உத்தரவாதமாக உள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சும் பும்ராவைத் தாண்டி எந்த ஒரு சாராம்சமும் இல்லாமல் சொத்தையாக உள்ளது. நல்ல துணை ஸ்பின்னர் இல்லை. ஜடேஜா பவுலிங்கை மறந்து விட்டார். கொஞ்சம் பேட்டிங்கையும் பீல்டிங்கையும் மறந்து வருகிறார். அவரைத் தூக்கி விட்டு வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுப்பது நல்லது. தொடர்ந்து குல்தீப் யாதவும் ஒழிக்கப்பட்டு வருகிறார்.
பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், கருண் நாயர் மாயை உடைந்து போயுள்ளது. இவர்களுக்குப் பதிலாக ஸ்ரேயஸ் அய்யர், சர்பராஸ் கான் வந்தால் அணி உருப்படும். இல்லையெனில் இதே அணியே தொடர்ந்தால் இந்த தொடரில் அது மிக மிகக் கடினமாக இந்தியாவுக்கு அமையும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக கலீல் அகது அல்லது அர்ஷ்தீப் சிங்கைத் தேர்வு செய்ய வேண்டும்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் கடைசி 6-7 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இந்திய அணி இழந்துள்ளது, இத்தனைக்கும் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பந்த், ராகுல் ஆகியோர் இங்கிலாந்து பந்து வீச்சும் மண்ணுதான் என்பதை நிரூபித்த பிறகும் இப்போது பாஸ்பால் அதிரடி வெற்றிக்கு இந்திய அணி இங்கிலாந்துக்கு வழிவகை செய்துள்ளது.
கடந்த முறை ஒரேயொரு டெஸ்ட் போட்டி தொடரின் மீதமுள்ள போட்டியாக பும்ரா தலைமையில் இந்திய அணி ஆடியபோது 378 ரன்கள் என்ற இலக்கை 7 விக்கெட்டுகள் மீதம் வைத்து 100 ஓவருக்குள் அடித்து நொறுக்கி இங்கிலாந்து வெற்றி பெற்றது அனைவரது கண் முன்னாலும் வந்து போகும் தானே.
இந்த ஹெட்டிங்லி டெஸ்ட்டில் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 359 ரன்களை அடிக்கும்போது கடைசி நாளில் பிட்ச் ஒன்றும் மாறாத நிலையில் இங்கிலாந்து மேலும் 350 ரன்களை அடித்து வெற்றி பெறாதா என்ன?
இங்கிலாந்து பவுலர் ஜாஷ் டங்கும் வெற்றி நிலைப்பாட்டை நேற்றைய நாளின் ஆட்டத்தின் போது உறுதி செய்தார். “ஓய்வறையில் வெற்றிக்குச் செல்வது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சில சமயங்களில் இந்திய அணி நன்றாகவே வீசலாம். கொஞ்சம் இந்திய பவுலர்கள் மீது பிரஷரைச் செலுத்தி வெற்றிக்குத்தான் முயல்வோம்.
ஆனால் இந்திய வீரர் ராகுலோ மாற்றுக் கருத்தாக, “இது பிளாக்பஸ்டர் பினிஷ் ஆக இருக்கப் போகிறது. பிட்ச் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. கொஞ்சம் ட்ரிக்கியாக உள்ளது. பும்ராவுக்கு ஒரு ஸ்பாட் இருக்கிறது. முதல் ஒரு மணி நேரத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம் என்றால் இது சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியாக மாறும்.
நிச்சயம் ஆட்டத்தில் முடிவு உண்டு. இங்கிலாந்தும் ஓபனாக வெற்றிக்குச் செல்வோம் என்றே கூறியுள்ளனர். அதாவது டிரா செய்ய விரும்பவில்லை என்கின்றனர். அவர்கள் ஆடும் அதிரடி முறையும் நமக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.
இந்திய அணி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்ற வேண்டும். ‘இங்கிலாந்து வந்தால் மலை…’ என்ற அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும் அதுதான் இந்திய அணிக்கு மிகமிக அபாயகரமானதும் அதே வேளையில் வெற்றி வாய்ப்பும் ஆகும்.