ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 371 ரன்களை சர்வசாதாரணமாக சேஸ் செய்து 5 விக்கெட்டுகளில் வென்றது என்பது வெறும் கேட்ச் ட்ராப்களினால் மட்டுமல்ல, பந்து வீச்சு பலவீனத்தினால் மட்டுமல்ல, கேப்டன் ஷுப்மன் கில்லிடம் ஒரு ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ இல்லாததும் காரணமே. தோனி போல் போட்டியை ஒரு கட்டத்தில் கைவிட்டு விடுகிறார்.
இதேபோன்ற மனநிலையிலிருந்துதான் தோனி காலக்கட்டத்தில் இருந்து விராட் கோலி மனநிலையில் அணுகுமுறையில் சட்டக மாற்றத்தையே ஏற்படுத்தினார். தோனி டெஸ்ட் கேப்டன்சியை ஆஸ்திரேலியாவில் உதறிய அடுத்த டெஸ்ட்டிலேயே கோலி ஆஸ்திரேலியாவின் 359 ரன்கள் இலக்கை விரட்டினார். துரதிருஷ்டவசமாக தோற்றது இந்திய அணி. ஆனால், கோலி கேப்டன்சியில் இந்திய அணி எப்படி ஆடப்போகிறது என்பதன் சூசக அறிகுறி கிட்டியது.
அதை கோலி நிரூபிக்கவும் செய்தார். வெற்றியை நோக்கி அவரது ஒவ்வொரு அடியும் தீர்மானகரமாகச் சென்றது. அனாவசியமாக அவரை ஐசிசி கோப்பை வெல்லவில்லை என்று தப்பும் தவறுமாக ஒப்பிட்டு அவரை மட்டம் தட்டினர். ஆனால், இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றால், அது விராட் கோலிதான் என்பதை ஆணித்தரமாகக் கூற முடியும். ரோஹித் சர்மா கேப்டன்சியும் தோனி பாணியில் போட்டியை ஒரு கட்டத்தில் கைவிடுவது என்ற நிலை தொடர்ந்தது.
இப்போது ஷுப்மன் கில் அதே மனநிலை, அணுகுமுறை உள்ள கேப்டனாக இருப்பது ஹெடிங்லீ தோல்வியில் பளிச்சிட்டது. முதலில் பயிற்சியாளரின் திட்டங்களை அமல்படுத்தலாம், சிக்கல் இல்லை. ஆனால், எந்த ஓவரை யாருக்குக் கொடுப்பது, அணித் தேர்வு இதிலெல்லாம் பயிற்சியாளர் தலையீடு இருந்தால் ஒரு கேப்டனாக ஷுப்மன் கில், ‘இதோ பார் நான் அணியின் கேப்டன். களத்தில் ஆடப்போவது நான், வழிநடத்தப்போவது நான், எனக்குரிய அணியை தேர்வு செய்ய விடு’ என்று தெள்ளத் தெளிவாக கம்பீர் போன்றவரிடம் தெரிவித்து விட வேண்டும். ஷுப்மன் கில் போன்ற ஒரு சாதுவை கேப்டனாக நியமிக்கக் காரணமே கம்பீர் தன் அத்தாரிட்டியை காட்டத்தான் என்றே நாம் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கில் போன்ற கேப்டன்கள் இதற்கு முன்னர் இந்திய அணியில் இருந்துள்ளனர், திலிப் வெங்சர்க்கார் அப்படிப்பட்ட கேப்டனாக இருந்தார். கே.எல்.ராகுல், அப்படி இருந்தார். ரோஹித் சர்மா இப்படித்தான் இருந்தார். சச்சின் டெண்டுல்கருக்கு அணி சரியாக அமையவில்லை, அவரும் அத்தாரிட்டியாகச் செயல்படவில்லை.
ஆக்ரோஷமான கேப்டன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டோடி. பிறகு அஜித் வடேகர். பிறகு சட்டக மாற்றம் கண்டவர் கபில் தேவ். அவருக்குப் பிறகு ஓரளவுக்கு அசாருதீன். பிறகு இன்னொரு சட்டக மாற்றம் சவுரவ் கங்குலி. பிறகு ஓரளவுக்கு அனில் கும்ப்ளே ஆக்ரோஷத்தைப் புகுத்தினார். தோனி வெள்ளைப்பந்தில் தாதா கேப்டன்; ஆனால் சிவப்புப் பந்தில் ஒன்றுமே இல்லை. சரணாகதிதான் அடைந்தார். பிறகு கோலிதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் கபில்தேவ் என்று கேப்டன்சியில் கூற முடியும் அளவுக்கு பெரிய அணுகுமுறை மாற்றங்களைப் புகுத்தி அயல்நாடுகளில் இந்திய அணியை ஓர் அச்சுறுத்தும் அணியாக மாற்றினார். இடையில் ராகுல் திராவிட் – கிரெக் சாப்பல் கூட்டணி மாற்றங்களை உருவாக்க முனைந்தனர். ஆனால், அணியின் சீனியர் வீரர்கள் பெரியத் தடைக்கற்களாக மாறியதில் 2007 உலகக் கோப்பை வெளியேற்றம் நிகழ்ந்ததைப் பார்த்தோம்.
ஷுப்மன் கில் பிரச்சினை என்னவெனில், பவுலிங் கோச் மோர்னி மோர்கெல் ஒரு வரைபடம் போட்டுக் கொடுத்து, அதைத் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கையொப்பமிட்டு ஆதரித்த பின், அதையே அமல் செய்ய வேண்டியக் கட்டாயத்துக்குள்ளாகிறார். ஸ்லிப்பில் நிறுத்தி வைத்து பேட்டர்களை வீழ்த்த பிளான் போடலாம் தவறில்லை, ஆனால் அது ஒர்க் அவுட் ஆகாதபோது பிளான் பி வேண்டும். இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவ் ஆக கற்பனை வளத்துடன் சிந்தித்து பிளான் பி-யை செலுத்த வேண்டும். அப்படி எதுவும் இல்லையா? ஷுப்மன் கில்லை சுயமாகச் சிந்திக்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் வெறும் புளூ பிரின்ட் கேப்டனாகி நாளை சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர் ஆகிவிடுவார்.
ஹெடிங்லே கடைசி நாளில் 2-வது புதிய பந்தை எடுக்கும்போது இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்தது 22 ரன்களே தேவை என்ற வெற்றி நிலையில்தான் இருந்தது. மோசமாக வீசிய ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் அன்று 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்போது, புதிய பந்தில் பும்ரா அப்படி 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தும் சாத்தியம் ஏராளம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் ஷுப்மன் கில், பயிற்சியாளர் கம்பீர், உடல்தகுதி பயிற்சியாளர் சொல்லும் பேச்சையெல்லாம் கேட்டு பும்ராவுக்கு புதியப் பந்தை கொடுக்கவே இல்லை. இது என்ன மாதிரியான மனோநிலை?
சென்னையில் ஒருமுறை சச்சின் டெண்டுல்கர் 136 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு ஏறக்குறைய இட்டுச் சென்றார். ஆனால் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் தூக்கி அடித்து லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேற, வாசிம் அக்ரமும் வக்கார் யூனிஸும் மீதமிருந்த வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து டெஸ்ட்டையே வென்றனர். அப்படிப்பட்ட மனநிலை கில்லுக்குத் தேவை. 22 ரன்களே வெற்றிக்கு இருந்தாலும் பும்ரா ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தும் சாத்தியம், இருந்தும் அவரைக் கொண்டுவராமல் போட்டியை இங்கிலாந்துக்குத் தாரை வார்ப்பதற்கு கம்பீருக்கோ, கில்லுக்கோ, யாருக்குமோ அதிகாரமில்லை.
கடைசி வரை போராட வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கி சாத்தியங்களைத் திறக்க வேண்டும். அப்படி முடியவில்லையா? கேப்டன்சியை விட்டு போய் விட வேண்டும். பயிற்சியாளர்களின் கைப்பாவையாக அவர் செயல்பட்டால் அது இந்திய அணியின் வரவிருக்கும் காலங்களுக்கு நல்லதல்ல.