371 ரன்கள் வெற்றி இலக்கை 5-ம் நாளில் இங்கிலாந்து சேஸ் செய்து அபார வெற்றி பெற்று ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. இதில் இந்திய பவுலிங்கின் போதாமை முழுக்க முழுக்க இங்கிலாந்தினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பொறுமை காக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .
அதுவும் இந்தியா நம்பியிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இல்லாமல் முடிந்தது இந்தத் தொடரே இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான அடையாளமாகத் திகழ்கிறது. அதுவும் பும்ராவை 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடவைப்பதாக பேச்சு அடிபடும் நிலையில் பந்து வீச்சில் நல்ல தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததும், சிராஜ் அடி வாங்குவதும், பிரசித் கிருஷ்னா விக்கெட் எடுத்தாலும் ஓவருக்கு 6 ரன்கள் பக்கம் கொடுப்பதும் பெரிய கவலைகளை தருகிறது.
ஜடேஜாவின் காலம் முடிந்து வருகிறது. ஷர்துல் தாக்கூரை ஒரு கேப்டனாக ஷுப்மன் கில் சரியாகப் பயன்படுத்தவில்லை. அணியின் கேட்சிங் படுமோசமாக உள்ளது. இந்நிலையில், கம்பீர் யாரைப் பொறுமை காக்க சொல்கிறார் என்று தெரியவில்லை.
நேற்று 2-வது புதிய பந்தின் போது இங்கிலாந்து வெற்றி இலக்கு 22 ரன்களே இருந்தது. 5 விக்கெட்டுகள் கையில் உள்ளது, இந்நிலையில் பும்ரா வீச அழைக்கப்படவே இல்லை. மீதமுள்ள இந்த ‘அடி’வாங்கும் பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்கள் என்று கம்பீர் நம்புகிறாரா? அவர் சொல்வதையே கேட்போம்:
“இந்த பவுலிங் அட்டாக்கில் ஒரு பவுலரிடம் 5 டெஸ்ட் போட்டிகள் அனுபவம் மட்டுமே உள்ளது. இன்னொரு பவுலரிடம் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் மட்டுமே உள்ளது. ஒருவர் 2 டெஸ்ட்களில் ஆடியுள்ளார். இன்னொருவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை.
பிரசித் கிருஷ்ணாவுக்கு இன்னும் நாம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். இவர்கள் அனைவருக்குமே நாம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். முன்பு 40 டெஸ்ட்கள் அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்கள் நம்மிடையே அணியில் இருந்தனர். டி20, ஒருநாள் போட்டிகளில் அனுபவம் பெரிய விஷயமில்லை. ஆனால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு டெஸ்ட் போட்டிக்காக செல்லும் போது பவுலிங் வரிசையில் அனுபவம் அவசியம் தேவை. இப்போது இந்தப் பந்து வீச்சுக்கு ஆரம்ப காலமே.
ஒவ்வொரு போட்டி முடிந்ததும் பந்து வீச்சு குறித்து நாம் தீர்ப்பு வழங்கிக் கொண்டே இருந்தால் ஒரு பந்து வீச்சு வரிசையை எப்படிப் பலப்படுத்த முடியும்? பும்ரா, சிராஜ் நீங்கலாக நம்மிடம் அனுபவஸ்தர்கள் இல்லை. அவர்களிடம் தரமிருக்கிறது. அதனால்தான் அவர்கள் ஓய்வறையில் அணியுடன் இருக்கிறார்கள். ஆகவே அனுபவமற்றவர்களின் திறமையை மதித்து இன்னும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இது ஏதோ இந்தத் தொடர் பற்றியது மட்டுமல்ல.
நீண்ட காலம் செயல்படக்கூடிய டெஸ்ட் வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்க வேண்டும். பும்ராவின் பணிச்சுமையை முதலில் மேலாண்மை செய்ய வேண்டும். ஏனெனில், நிறைய போட்டிகள் வருகின்றன. இந்தத் தொடருக்கு முன்னரே பும்ரா 3 டெஸ்ட்களில்தான் ஆடப்போகிறார் என்பது முடிவான விஷயம். ஆனால், இது இறுதி முடிவல்ல, அவர் உடல்தகுதி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இந்தத் தொடரில் அவர் ஆடப்போகும் அடுத்த 2 டெஸ்ட்கள் எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
பந்து வீச்சு அட்டாக் இருக்கிறது. நாங்கள் அவர்களை நம்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்கிறோம். அனுபவம் இல்லாதவர்கள்தான். ஆனால், போகப்போக நன்றாக தேறி விடுவார்கள். இந்த முதல் டெஸ்ட்டில் கூட நான்கு நாட்கள் நாம் நல்ல நிலையில்தான் இருந்தொம். 5-ம் நாளிலும் நமக்கான வாய்ப்பு இருந்தது. எனவே இந்த பவுலர்கள் நமக்கு வெற்றி தேடி தருவார்கள் என்று நம்புவோம்.
ஷர்துல் குறைவாகப் பயன்படுத்தப்பட்டார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதுவும் எதனால் என்றால் ஜடேஜா நன்றாக வீசிக்கொண்டிருந்தார். ஷர்துல் நமக்கு முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். நான் இங்கு உட்கார்ந்து கொண்டு அவர் நன்றாக வீசினார், இவர் நன்றாக வீசவில்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கப்போவதில்லை” இவ்வாறு கூறினார்.