
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது. ஒரு பயிற்சியாளருக்கு என்ன உரிமைகள் உண்டோ அவர் என்ன செய்யலாமோ அதுவரை அவரை நிறுத்துவதுதான் நல்லது. இல்லையெனில் கவுதம் கம்பீர் ஒரு எதேச்சதிகரியாக உருவாகி அணியைச் சீரழிப்பதுதான் நடக்கும் என்ற எச்சரிக்கை பிசிசிஐ, முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பண்டிதர்கள் போன்றோருக்கு நிச்சயம் வேண்டும்.
நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் வேகப்பந்து வீச்சு ஆட்டக்களம் போடப்பட்டு இந்திய அணி 49 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. பிறகு எனக்கு முதல் பந்திலிருந்தே திரும்பும் பிட்ச்கள் வேண்டும் என்று பயிற்சியாளர் கம்பீர் வலியுறுத்தினார். என்ன ஆயிற்று? 0-3 என்று உதைதான் கிடைத்தது. அஸ்வினாலேயே விக்கெட் எடுக்க முடியவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எப்பவாவது ஆடும் சாண்ட்னர் இந்திய அணியைச் சுருட்டி பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார்.

