ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் தனது இறுதிச் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவிடம் தோல்வியை தழுவினார். இதனால் இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை குகேஷ் இழந்தார். தோல்விக்கு பிறகு மேஜை மீது தன் தலையை சாய்த்துக் கொண்டு குகேஷ் வாடினார்.
அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் இந்த தொடர் நடைபெற்றது. 6 வீரர்கள் கலந்து கொண்ட இந்தத் தொடர் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றது. இதில் 9 சுற்றுகளில் விளையாடிய குகேஷ் 14.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் தனது இறுதிச் சுற்று ஆட்டத்தில் பேபியானோ கருனா உடன் கருப்பு நிற காய்களை கொண்டு குகேஷ் விளையாடினார். இந்த ஆட்டம் குகேஷுக்கு எளிதானதாக அமையவில்லை. தொடக்கம் முதலே பேபியானோ கருனா ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டத்தில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என குகேஷ் முயற்சித்தார். இதில் கடைசி நேரத்தில் காய் நகர்த்தலின் போது செய்த தவறு காரணமாக ஆட்டத்தை இழந்தார். இதன் மூலம் பட்டம் வெல்லும் வாய்ப்பையும் அவர் இழந்தார். அதை அறிந்த 18 வயதான அவர் மேஜையில் தலையை சாய்த்து வாடினார்.
மறுபக்கம் தனது இறுதிச் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியை மேக்னஸ் கார்ல்சன் எதிர்கொண்டார். அதில் கார்ல்சன் வெற்றி பெற்று நார்வே கிளாசிக்கல் செஸ் தொடரில் 7-வது முறையாக பட்டம் வென்றார். 14.5 புள்ளிகளுடன் குகேஷ் மூன்றாம் இடம் பிடித்தார்.