அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ். இந்த ஆட்டத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது:
“ஸ்ரேயஸ் ஐயர் அபாரமாக பேட் செய்தார். அவர் ஆடிய சில ஷாட்கள் சிறப்பாக இருந்தது. பஞ்சாப் அணி சிறப்பாக பேட் செய்தது. இந்த இலக்கு எட்டக்கூடியது என்றாலும் நாங்கள் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். இது மாதிரியான பெரிய ஆட்டங்களில் பந்து வீச்சு யூனிட் அதை செய்திருக்க வேண்டும்.
பஞ்சாப் அணி வீரர்கள் தங்களது பேட்டிங் மூலம் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். நாங்கள் எங்களது பந்து வீச்சு திட்டங்களை முறையாக செயல்படுத்த தவறினோம். எங்களது பந்து வீச்சில் லெந்த் மற்றும் சரியான நேரத்தில் சரியான பவுலரை பந்து வீச செய்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.
ஆட்டத்தின் சூழல் குறித்து பும்ரா அறிவார். அவரால் சிலவற்றை சிறப்பாக செய்ய முடியும். அது ஏனோ இன்று நடைபெறவில்லை. அவ்வளவு தான்” என்றார்.
இந்த ஆட்டத்தில் ஹர்திக் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 2 ஓவர்கள் மட்டுமே வீசி இருந்தார். குறிப்பாக சான்ட்னரை 4 ஓவர்கள் முழுவதுமாக வீச வைக்காதது குறித்து மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் 204 ரன்கள் என்ற இலக்கை 19 ஓவர்களில் எட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிறகு இறுதிப் போட்டிக்கு தங்கள் அணியால் முன்னேற முடியாதது குறித்து கேப்டன் ஹர்திக் வருந்தினார். இருப்பினும் லீக் சுற்றில் முதல் 5 ஆட்டங்களில் நான்கு தோல்விகளை தழுவிய மும்பை அணி, அதன் பின்னர் தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் குஜராத் அணியை வெளியேற்றிய மும்பை அணியால், குவாலிபையர்-2 ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்த முடியவில்லை. அதோடு அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் அந்த அணியின் தொடர் தோல்வி தொடர்கிறது.