அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரில் ‘ரவுண்ட் ஆப் 16’ நாக்-அவுட் சுற்று போட்டியில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள இன்டர் மியாமி அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து அந்த அணி வெளியேறி உள்ளது.
அமெரிக்காவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 29) இரவு 9.30 மணிக்கு இன்டர் மியாமி மற்றும் பிஎஸ்ஜி அணி இடையிலான ‘ரவுண்ட் ஆப் 16’ போட்டி தொடங்கியது. இந்த ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தது பிஎஸ்ஜி.
தொடர்ந்து ஆட்டத்தில் பிஎஸ்ஜி ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமியின் டிபென்ஸ் படு வீக்காக இருந்தது. அதை பயன்படுத்திக் கொண்ட பிஎஸ்ஜி பந்தை பாஸ் செய்வதில் துல்லியமாக செயல்பட்டது. அவர்களை தடுக்க மியாமி அணியினர் மேற்கொண்ட முயற்சிகள் பெரும்பாலும் தோல்வி அடைந்தன.
ஆட்ட நேரத்தில் சுமார் 67 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் பிஎஸ்ஜி அணியினர். அதன் பலனாக 733 பாஸ்களை இந்த ஆட்டத்தில் அந்த அணி மேற்கொண்டது. அது 93 சதவீதம் துல்லியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 19 ஷாட்களை அந்த அணி ஆடியது. அதில் 9 ஷாட்கள் ‘ஆன்’ டார்கெட்டில் இருந்தது.
முதல் பாதியில் பிஎஸ்ஜி அணியின் ஜோவோ நெவ்ஸ் இரண்டு கோல்களை முறையே ஆட்டத்தின் 5 மற்றும் 39-வது நிமிடத்தில் பதிவு செய்தார். மற்றொரு பிஎஸ்ஜி வீரர் ஹக்கிமி முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் ஒரு கோல் பதிவு செய்தார். இதோடு இன்டர் மியாமியின் மாற்று வீரர் தாமஸ் 44-வது நிமிடத்தில் போட்டுக் கொடுத்த சுய கோல் என முதல் பாதி முடியும் போது 4-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி முன்னிலையில் இருந்தது.
அதன் பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களாலும் கோல் பதிவு செய்ய முடியவில்லை. அதனால் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி, காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. காலிறுதி ஆட்டத்தில் வரும் ஜூலை 5-ம் தேதி Bayern முனிச் அணியை பிஎஸ்ஜி சந்திக்கிறது. அமெரிக்க தேசத்தின் கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றான இன்டர் மியாமி இந்த தோல்வியால் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.