சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் ராயுடு கூறியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான செயல்பாடு அந்த அணி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அண்மையில் முன்னாள் சிஎஸ்கே வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
இந்த வரிசையில் இப்போது மற்றொரு முன்னாள் சிஎஸ்கே வீரர் ராயுடு இணைந்துள்ளார். “மும்பை இந்தியன்ஸ் அணி உடனான ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே ரன் சேர்க்கவே இல்லை. டி20 கிரிக்கெட் மாற்றம் கண்டுள்ளது. இப்போதெல்லாம் மிடில் ஓவர்களில் கூட நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அணிகள் ரன் சேர்க்கின்றன. சிஎஸ்கே அணி ஆட்டத்தில் அதிரடி காட்ட தவறுகிறது. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது இயல்பு. ஆனால், களத்தில் முனைப்பை வெளிப்படுத்த வேண்டும். மும்பை உடன் 190+ ரன்களை சேர்த்திருக்கலாம். மிடில் ஆர்டர் காரணமாக அதை செய்ய தவறிவிட்டது சிஎஸ்கே.
நடப்பு சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். அதையே தான் தோனியும் சொல்லி உள்ளார். அவர்களது பார்வை அடுத்த சீசன் நோக்கி உள்ளது. அணியின் கவனம் இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அச்சமற்று கிரிக்கெட் ஆடுவதிலும்தான் இருக்க வேண்டும். ஆட்டத்தை நேர்மறை எண்ணத்துடன் அணுக வேண்டும். இளம் வீரர் ஆயஷ் மாத்ரேவுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.