சேலம்: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தியது.
இந்த லீக் ஆட்டம் சேலம் எஸ்சிஎப் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை 3.15 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய திருச்சி சோழாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்களைக் குவித்தது.
அந்த அணி வீரர் சஞ்சய் யாதவ் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சுஜாய் 37, சுரேஷ் குமார் 3, வசீம் அகமது 3, ஜே கவுசிக் 15, யு.முகிலேஷ் 23, ஜபார் ஜமால் 17 ரன்கள் எடுத்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்களையும், டி. நடராஜன், சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
திருப்பூர் அணியின் விக்கெட் கீப்பரான துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும். அமித் சாத்விக் 5, டேரில் பெராரியோ 1, பிரசோத் ரஞ்சன் பால் 42, முகமது அலி 25 ரன்கள் எடுத்தனர்.
திருச்சி அணி சார்பில் கே.ஈஸ்வரன் 2 விக்கெட்களையும், சஞ்சய் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்த ரஹேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.