சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய தலைவராக சண்முகம் தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் 31-ம் தேதி காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து தற்போது மறு தேர்தல் நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் பாலசுப்பிரமணியன் இந்தத் தேர்தலுக்கு பொறுப்பாளராக பணியாற்றினார். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.
கால்பந்து சங்க தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சண்முகம் 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட சுரேஷ் 38 வாக்குகளைப் பெற்றார். துணைத் தலைவர்களாக பாலசுப்பிரமணியம்(49 வாக்குகள்), கண்ணன்(47 வாக்குகள்), மணி (50 வாக்குகள்), ராதாகிருஷ்ணன்(59 வாக்குகள்), ரமேஷ் (55 வாக்குகள்) தேர்வாகியுள்ளனர்.
பொருளாளராக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 48 வாக்குகளைப் பெற்றார். பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட சிவானந்தம் 32 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தைப் பிடித்தார்.