மும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டிராபி சுற்றுப்பயண தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைகியா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமி ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பட்டம் வெல்ல முடியாததற்கான தடைகளை உடைக்க நாங்கள் விரும்புகிறோம். அனைத்து இந்தியர்களும் இதற்காக காத்திருக்கின்றனர். உலகக் கோப்பைகள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை, என் நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். யுவராஜ் சிங்கை பார்க்கும் போதெல்லாம் அது எனக்கு நிறைய உந்துதலைத் தருகிறது.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக உள்நாட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சவாலானது. இந்த தொடரின் வாயிலாக எங்கள் நிலை என்ன என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்.
எங்கள் பயிற்சி முகாம்களில் நாங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், அதன் முடிவுகள் களத்தில் வெளிப்பட்டு வருகின்றன. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் நான் விளாசிய 171 ரன்கள் மிகவும் சிறப்பானது.
அந்த இன்னிங்ஸ் எனக்கும் ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டுக்கும் மிகவும் சிறப்பான ஒன்று. அந்த ஆட்டத்துக்கு பிறகு நிறைய விஷயங்கள் மாறியது. இறுதிப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து நாடு திரும்பியபோது, நிறைய பேர் காத்திருந்து எங்களை உற்சாகப்படுத்தினர். அதை நினைத்தால் இப்போதும் உடல் சிலிர்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.