பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலந்து அணிக்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 180 ரன்கள் முன்னிலை உடன் சேர்த்தால் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் 608 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய வேண்டும்.
இந்தச் சூழலில் சுமார் 140 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என பார்ப்போம்…
> கடந்த 2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செயின்ட் ஜான்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 418 ரன்களை எட்டி இருந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ராம்நரேஷ் சர்வான் மற்றும் ஷிவ்நரைன் சந்தர்பால் கூட்டணி மேற்கு இந்திய தீவுகளின் வெற்றிக்கு உதவியது.
> கடந்த 2008-ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 414 ரன்கள் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. ஸ்மித் மற்றும் டிவில்லியர்ஸ் சதம் விளாசினர்.
> கடந்த 1948-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹெட்டிங்கிலியில் 404 ரன்கள் இலக்கை எட்டி அசத்தி இருந்தது ஆஸ்திரேலியா. டான் பிராட்மேன் 173 ரன்கள் எடுத்திருந்தார். ஆர்த்தர் மோரிஸ் 182 ரன்கள் எடுத்தார்.
> கடந்த 1976-ம் ஆண்டு 403 ரன்கள் இலக்கை மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா சேஸ் செய்திருந்தது. சுனில் கவாஸ்கர் மற்றும் குண்டப்பா விஸ்வநாத் சதம் விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
> கடந்த 2021-ல் 395 ரன்கள் இலக்கை வங்கதேச அணிக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
> கடந்த 2017-ல் கொழும்பில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 388 ரன்கள் இலக்கை கடந்திருந்தது இலங்கை.
> கடந்த 2008-ல் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 387 ரன்களை இந்தியா சேஸ் செய்தது. சச்சின் 103, சேவாக் 83, யுவராஜ் 85 ரன்கள் எடுத்திருந்தனர்.
> கடந்த 2022-ல் இதே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக 378 ரன்கள் இலக்கை இங்கிலாந்து வெற்றிகரமாக சேஸ் செய்தது. ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அந்த போட்டியில் சதம் விளாசி இருந்தனர்.
> கடந்த 2015-ல் இலங்கையில் 377 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் சேஸ் செய்திருந்தது. ஷான் மசூத் மற்றும் யூனிஸ் கான் சதம் விளாசி இருந்தனர். மிஸ்பா உல் ஹக் 59 ரன்கள் எடுத்திருந்தார்.
>கடந்த வாரம் இந்திய அணிக்கு எதிராக 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து வெற்றிகரமாக சேஸ் செய்திருந்தது.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் என்ன நடக்கும்? – தற்போது இங்கிலாந்து அணி 608 ரன்கள் என்ற இலக்கை விரட்ட வேண்டும். ஆடுகளம் தட்டையாக இருப்பதால் ரன் குவிப்புக்கு ஏதுவாக உள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய பந்தில் மட்டுமே பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடிகிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இங்கிலாந்து அணி ‘பாஸ்பால்’ பாணியில் அதிரடியாக ஆட விரும்பும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து வரலாறு படைக்கவே அந்த அணி விரும்பும். சொந்த மண்ணில் விளையாடும் சாதகம் அந்த அணிக்கு உள்ளது. ஒருவேளை சேஸ் கொஞ்சம் ரிஸ்க் என கருதினால் டிராவுக்கு ஆட வாய்ப்புள்ளது. அதற்குள் இந்திய அணி இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்.