நேபாளம், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிளாஸ்கோவில் நேற்று நடைபெற்ற தொடரின் 2வது ஆட்டம் வரலாறு காணாத 3 சூப்பர் ஓவர் வரை சென்று கடைசியில் நெதர்லாந்து அணி போராடி வெற்றியை ஈட்டியது.
சமீப காலங்களாக நேபாள அணி பிரமாதமாக ஆடி வருகிறது. ஸ்காட்லாந்து அணிக்கு கடும் கடினப்பாடுகளைக் கொடுத்து சமீபத்தில் வென்றதும் நினைவிருக்கலாம். நேற்றைய போட்டியும் டி20 அரங்கில் நேபாளத்தின் எழுச்சிக்கு ஓர் உதாரணம். முழு நேர ஆட்டத்தில் நெதர்லாந்து முதலில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இலக்கை விரட்டிய நேபாள அணி 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுக்க போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்குச் சென்றது. இதுவே 3 சூப்பர் ஓவர்களாகி பிறகு நெதர்லாந்து போராடி வென்றது.
டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் சரி லிஸ்ட் ஏ போட்டியிலும் சரி இதுவரை எந்தப் போட்டியும் 3 சூப்பர் ஓவர்கள் வரை சென்றதில்லை. அந்த விதத்தில் இது வரலாற்று நிகழ்வு.
முழு நேர 20 ஒவர் ஆட்டத்தில் நேபாள் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் நந்தன் யாதவ் என்ற நேபாள் வீரர் நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் கிளைனை 2 பவுண்டரிகள் இரண்டு 2 ரன்களை எடுத்தார், முன்னதாக இதே ஓவரில் லமிஷென் முதல் பந்தை 2 ரன்கள் எடுக்க அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்து நதன் யாதவிடம் கொடுக்க அவர் 4,2, 2, 4 என்று போட்டியை டை செய்து முதல் சூப்பர் ஓவருக்கு இட்டுச் சென்றார்.
முதல் சூப்பர் ஓவர்: நேபாள் முதலில் பேட் செய்ய அதன் தொடக்க வீரர் குஷல் பூர்டெல் இறங்கினார்.. நேதர்லாந்தின் இடது கை ஸ்பின்னர் டேனியல் டோரம் வீசினார். இதில் நேபாள் வீரர் பூர்டெல் அவரை 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசினார், இது தவிர அந்த சூப்பர் ஓவரில் ஒரு இரண்டு, ஒரு சிங்கிள் வர ஸ்கோர் 19/1.
நெதர்லாந்தின் மைக்கேல் லெவீட், மேக்ஸ் ஓ தவுத் இறங்கினர். நேபாள் பவுலர் கரன் வீசினார், ஆனால் லெவிட் முதல் பந்தையே சிக்சர் விளாசி அதிர்ச்சியளித்தார், கடைசி 2 பந்துகள் மேக்ஸ் தவுத் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி விளாச மேட்ச் 19/0 என்று மீண்டும் டை ஆகி 2வது சூப்பர் ஓவருக்குச் சென்றது.
2வது சூப்பர் ஓவர்: நெதர்லாந்து இம்முறை முதலில் பேட் செய்ய நேபாள் பவுலர் லலித் ராஜ்பன்ஷி வீச முதல் 3 பந்துகளில் 2 பந்துகள் சிக்சர்களுக்குப் பறந்தது. ஆனால் அடுத்த 3 பந்துகள் நன்றாக வீச நெதர்லாந்து 17 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து இலக்கை விரட்டிய நேபாள் அணி பவ்டெல், ஐரீ ஆகியோரை ஓப்பனிங் இறக்கியது. கிளைன் வீச பவ்டெல் முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார். பிறகு சிங்கிள், ஐரி ஸ்ட்ரைக்கிற்கு வந்து பவுண்டரி விளாசினார். ஆக 3 பந்துகளில் 11 ரன்கள் வந்து விட்டது. ஆனால் கிளைன் அடுத்த 2 பந்துகளை ஐரிக்கு டாட் பால்களாக வீச கடைசி பந்து சிக்ஸ். நேபாளும் 17 ரன்கள் என்று போட்டி வரலாற்று நிகழ்வாக 3வது சூப்பர் ஓவருக்குச் சென்றது.
3வது சூப்பர் ஓவர்: இந்த சூப்பர் ஓவரை நெதர்லாந்து பவுலர் ஜாக் லயன்- கேச்செட் வீசினார். இதில் முதல் பந்தில் பவ்டெல் விக்கெட்டை டக்கில் வீழ்த்தினார். அடுத்த இரண்டு பந்துகள் டாட் பால். அறிமுக வீரர் ருபேஷ் சிங்கினால் ரன் அடிக்க முடியவில்லை, 4வது பந்தில் ருபேஷ் சிங்கும் அவுட் ஆக ரன் இல்லாமலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 4 பந்துகளுடன் நேபாள் சூப்பர் ஓவர் கதையும் முடிந்தது. அடுத்து இறங்கிய நெதர்லாந்து வீரர் லெவிட், லமிச்சேன் வீசிய முதல் பந்தையே சிக்ஸ் விளாச நெதர்லாந்து 3வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது,
முன்னதாக முழு நேர ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணியில் தேஜா நிடமனுரு அதிகபட்சமாக 35 ரன்களை எடுத்தார், ஆனால் இவர் போட்ட பிளேடில்தான் நெதர்லாந்தின் ஸ்கோரும் குறைந்தது. இவர் 37 பந்துகளில் ஒரே ஒரு சிக்சருடன் இந்த ஸ்கோரை எடுத்துச் சொதப்பினார். கடைசியில் சகிப் சுல்பிகர் 12 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 25 ரன்கள் விளாச ஸ்கோர் 152/7 என்று முடிந்தது. நேபாள் தரப்பில் நந்தன் யாதவ் 2 விக்கெட்டுகளையும் லமிச்சேன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய நேபாள் அணியில் குஷல் பூர்டெல் 23 பந்துகளில் 34 ரன்களையும் கேப்டன் ரோஹித் பவ்டெல் 35 பந்துகளில் 48 ரன்களையும் எடுக்க கடைசியில் நந்தன் யாதவ் கடைசி ஓவரில் 12 ரன்களை எடுக்க நேபாளமும் 152 ரன்களை எடுத்து டை செய்தது. ஆட்ட நாயகனாக சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் டக் அவுட் செய்த நெதர்லாந்து பவுலர் ஜாக் லயன் கேச்சட் தேர்வு செய்யப்பட்டார். வரலாற்று மேட்ச் இது என்று வைரலாகி வருகிறது.