கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸ்தி
ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிங்ஸ்டனில் நேற்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரண்டன் கிங் 36 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார். ஆந்த்ரே ரஸ்ஸல் 15 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்களையும், கிளென் மேக்ஸ்வெல், நேதன் எலிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஷ் 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், கேமரூன் கிரீன் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக மேக்ஸ்வெல் 12, கேப்டன் மிட்செல் மார்ஷ் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் டி 20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.