ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்ததையடுத்து எதிர்கொண்ட விமர்சனங்களை தனது அபார கேப்டன்சி அணுகுமுறை மூலம் வெற்றியாக மாற்றி வழக்கமான 4-வது இன்னிங்ஸ் சேஸிங் என்ற மேஜிக் அணுகுமுறையினால் இந்திய அணியை நிலைகுலையச் செய்தார்.
ஆனால், இந்திய அணியின் பக்கம் நிறைய தவறுகள் இருந்தன. முதல் இன்னிங்ஸில் 570 பக்கம் ஸ்கோர் செய்திருந்தாலோ, 2-வது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சொல்வது போல் 435-440 ரன்களை லீடாகப் பெற்றிருந்தாலோ இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும் வெற்றியாகவே கூட மாறியிருக்கும். இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் அற்புதமாக ஆடியும் ஒரு போட்டியைத் தோற்க முடியும் என்றால் தவறு எங்கிருந்து வந்தது என்பதை கம்பீர் குழுவினர் ஆராய வேண்டும்.
இந்திய அணி சொதப்பிய இடங்களும் செய்ய வேண்டியதும்! – இந்திய அணியின் டெயில் எண்டர்கள் அதாவது கடைசி 4 வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 9 ரன்களையே எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் கடைசி 7 விக்கெட்டுகளை 41 ரன்களுக்கு இழந்ததும், 2-வது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததும், ஜாஷ் டங் போன்ற எந்த ஒரு பெனட்ரேஷனும் இல்லாத பவுலரை பெரிய பவுலராக்கி விட்டதும் இமாலயத் தவறுகள்.
கிரிக் இன்போ கூறும் புள்ளிவிவரங்களின் படி கடந்த 20 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தனை கேட்ச்களை இந்தியாவைத் தவிர வேறு எந்த அணிகளும் கோட்டை விட்டதில்லை. அணியின் 3-வது, 4-வது பவுலர்கள் கட்டுக்கோப்புடன் வீசவில்லை, கட்டுப்படுத்தவும் இல்லை. 2-வது நாள் முழுவதும் இந்திய அணி ஆடியிருக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எடுத்து இங்கிலாந்து கொடுத்த கேட்ச்களைப் பிடித்து பெரிய லீட் எடுத்திருக்க வேண்டும். அதே போல் 4-ம் நாள் முழுவதும் இந்திய அணி ஆடியிருக்க வேண்டும். இது அனைத்திலும் தோல்வி கண்டதால் டெஸ்ட்டிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிட்ச்கள் இப்படித்தான் இருக்கப்போகிறது, 4-வது இன்னிங்ஸ் சேசிங் என்பதை பாஸ்பால் ஸ்டோக்ஸ் அணி தாரக மந்திரமாகப் பயிற்சி செய்து வருகிறது. முதலில் நல்ல ஒரு ஸ்பின்னரை அணியில் தயார் செய்ய வேண்டும். ஜடேஜாவைத் தூக்கி விட்டு வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வர வேண்டும். ஸ்லிப் பீல்டிங் தரமாக மாற வேண்டும். இங்கிலாந்தின் இத்தகைய பிட்ச்களில் 5-ம் நாளில் 370-80 ரன்களைத் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. அதற்கேற்றாற்போல் பந்து வீச்சை மாற்ற வேண்டும். கள வியூகத்தை மாற்ற வேண்டும். புதிதான உத்திகளை வகுக்க வேண்டும்.
ரவி சாஸ்திரி – கோலி கூட்டணியில் பவுலிங் பயிற்சியாளராக இருந்த பரத் அருண் கூட்டணி அருமையாக திட்டங்களை வகுத்தனர். வெறும் ஸ்லிப் கேட்சிங் மட்டுமே பவுலிங் உத்தியாக இல்லாமல் வித்தியாசமான களவியூகங்கள் அமைத்து அதற்கேற்ப பந்து வீசி விக்கெட்டுகளைச் சாய்க்கும் புதிய உத்திகளை வகுத்தெடுத்தார்கள். இதனால் தான் ஆஸ்திரேலியாவில் 2 தொடர்களை வெல்ல முடிந்தது. ஆஸ்திரேலிய பிட்ச்களில் வெல்ல முடிகின்ற போது இங்கிலாந்து மட்டுமே ஏன் எப்போதும் கை நழுவுகிறது? காரணம் பீல்டிங், பவுலிங் சொதப்பல்தான்.
மோர்னி மோர்கெல் போன்ற பயிற்சியாளரெல்லாம் தென் ஆப்பிரிக்க பிட்ச் சூழலிலிருந்து வளர்ந்தவர். அதனால் ஸ்லிப்பில் கேட்ச் வரும் பந்து வீச்சு மட்டுமே திறமையான பந்து வீச்சு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அது ஒர்க் அவுட் ஆகாத போது மாற்று உத்திகளை வகுக்க வேண்டும். உதாரணமாக இங்கிலாந்தில் 4-வது ஸ்டம்பில் வீசி பந்தை ஸ்விங் செய்வது, மேல் எழுப்புவது என்பது தேர்ட்மேன் திசையில் பவுண்டரிகளை அள்ளிக்கொடுக்கும் உத்தியாகும். ஏனெனில், ஆஸ்திரேலியா போல் பந்துகள் இங்கிலாந்தில் எழும்பாது. எனவே இந்த உத்தி முதல் 10 ஓவர்களுக்குத்தான் செல்லுபடியாகும். அதன் பிறகு 2 ஸ்லிப் என்று நிறுத்தி வைத்து லெக் திசையில் நெருக்கமாக அமைத்து ஆஃப் கட்டர்களை வீசி இங்கிலாந்து பேட்டர்களை முடக்குவதுதான் ஒரே வழி.
இந்தியாவின் ஸ்பின்/பேட்டிங் பிட்ச்களில் ஆடம் கில்கிறிஸ்ட் ஒருமுறை இங்கு வந்து தொடரை வென்ற போது ஆஃப் கட்டர்கள் உத்தியைக் கடைப்பிடித்து லெக் திசையில் 7 பீல்டர்களை நெருக்கமாக நிற்க வைத்து லஷ்மண், திராவிட், சச்சின் உள்ளிட்டோரையே காலி செய்தார். நமக்குத் தேவை விக்கெட். அதை எப்படிப் பெற்றாலும் தகும். அதுவும் இங்கிலாந்து இப்போது ஆடும் அதிரடி முறைக்கு ரன்களை கட் செய்தாலே போதும் பதற்றமடைந்து விக்கெட்டுகளைக் கொத்தாகக் கொடுப்பார்கள். கம்மின்ஸ் அதைத்தான் கடந்த இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் செய்தார்.
நேற்று 5-ம் நாளில் நன்றாக வீசிய சிராஜ் பிறகு 42-வது ஓவர் முதல் 80-வது ஓவர் வரை பந்து வீச அழைக்கப்படவே இல்லை. ஏன்? இதெல்லாம் பெரிய தவறு. பாதி நேரம் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் களவியூகம் அமைத்து பவுலர்களிடம் பேசியதைப் பார்க்க முடிந்தது. ஏன் கில் என்ன ஆனார்? ஷர்துல் தாக்கூர் பவுலிங் ஆல்ரவுண்டராக ஒர்க் ஆகவில்லை எனில் ஒரு முறையான பவுலரைக் கொண்டு வர வேண்டியதுதான். குல்தீப் யாதவ்தான் சிறந்த தேர்வு. ஏனெனில் இங்கிலாந்து அவரைப் பார்த்தாலே பதற்றமடைவார்கள்.
எனவே கம்பீரும் ஷுப்மன் கில்லும் பிற உதவிப் பயிற்சியாளர்களும் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, சரியாக அதை நடைமுறைப்படுத்தினால் இங்கிலாந்தை அடுத்த டெஸ்ட்டிலேயே வீழ்த்தலாம். ஏனெனில், அவர்களது பந்து வீச்சு நம்மை ஒப்பிடும்போது மோசமாகவே உள்ளது. நம்மிடம் நல்ல கீழ்வரிசை பேட்டிங் இருந்திருந்தால் இங்கிலாந்து பந்து வீச்சும் முழுதும் அம்பலமாகியிருக்கும்.