சென்னை: ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை சார்பில் சர்வதேச பிக்கிள்பால் போட்டி வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியுடன் இசை திருவிழாவும் இணைந்து நடத்தப்படுகிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை இந்தியா பிக்கிள்பால் கூட்டமைப்பு, தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கம், டைனமிக் யுனிவர்செல் பிக்கிள்பால் ரேட்டிங், பிக்கிள்பால் உலக ரேங்கிங் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இந்த போட்டி 1,000 புள்ளிகளை கொண்டதாகும். இதில் உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.