லண்டன்: இங்கிலாந்து அணி உடனான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் சிராஜ். கடைசி டெஸ்ட் போட்டியை டிரா செய்து, தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் தேவைப்பட்டது. மழை காரணமாக 4-ம் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியாமல் போனது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ஜேமி ஸ்மித் மற்றும் ஜேமி ஒவ்ர்டன் இருந்தனர்.
5-ம் நாள் ஆட்டத்தின் 2-வது ஓவரை இந்தியா சார்பில் சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் ஸ்மித்தை வெளியேற்றினார் சிராஜ். அதற்கடுத்த தனது ஓவரில் ஜேமி ஓவர்டன்னை எல்பிடபிள்யூ முறையில் சிராஜ் வெளியேற்றினார். மற்றொரு முனையில் இருந்து பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா டங்கை வெளியேற்றினார். தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் பேட் செய்ய வந்தார். காயம் காரணமாக ஒற்றைக் கையில், அதுவும் இடது கையால் மட்டுமே பேட் செய்யும் நிலையில் அவர் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்தச் சூழலில் 2-வது இன்னிங்ஸின் 86-வது ஓவரின் முதல் பந்தில் அட்கின்சனை சிராஜ் போல்ட் செய்தார். அதற்கு முன்னதாக சிராஜ் வீசிய முந்தையை ஓவரில் அவர் சிக்ஸர் விளாசி இருந்தார். ஆனால், இந்த ஓவரில் அது முடியாமல் போனது. இந்தப் போட்டியில் 374 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 6 ரன்களில் வெற்றி பெற்றது. மிக அற்புதமாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு சிராஜ் உதவினார்.
இந்திய அணியின் வெற்றிக்கு தேவையான 4 விக்கெட்களை வெறும் 8.5 ஓவர்களில் கைப்பற்றி இருந்தனர் பவுலர்கள். ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியின் விடாமுயற்சிக்கு சான்றாக இந்த ஆட்டம் என்றென்றும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிற்கும், நினைவில் இருக்கும்.
முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 5 என மொத்தம் 9 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் சிராஜ் கைப்பற்றினார். இதன் மூலம் லார்ட்ஸில் கைநழுவிய வெற்றியை ஓவலில் சிராஜ் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது. வெற்றிக்குப் பிறகு ஓவல் மைதானத்தை வலம் வந்தனர் இந்திய வீரர்கள். சிராஜ் தனது கைகளில் பந்தை வைத்துக்கொண்டு பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 ரன்களும், ஆகாஷ் தீப் 66 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 53 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 53 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5, கஸ் அட்கின்சன் 3, ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாடியது.
3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 14 ரன்களில் சிராஜ் பந்தில் வீழ்ந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 34 ரன்களுடனும், ஆலி போப் 0 ரன்களுடனும் தொடங்கினர். அபாரமாக விளையாடி பென் டக்கெட் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஆலி போப் 27 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 106 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஹாரி புரூக்கும் ஜோடி சேர்ந்து இன்னிங்ஸை கட்டமைத்தனர். உணவு இடைவேளையின்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களாக இருந்தது.
ஜோ ரூட் நிதானமாக விளையாட, ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. அபாரமாக விளையாடி ஹாரி புரூக் 91 பந்துகளில் சதமடித்தார். அவர் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ்தீப் பந்துவீச்சில், சிராஜிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்-புரூக் ஜோடி 195 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் ஜோ ரூட்டுடன், பெத்தேல் இணைந்து விளையாடத் தொடங்கினார். தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களாக இருந்தது. ஜேக்கப் பெத்தேல் ஒரு ரன்னும், ரூட் 98 ரன்களும் எடுத்திருந்தனர். தேநீர் இடைவேளைக்குப் பின்னரும் அபாரமாக விளையாடிய ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 39-வது சதத்தை விளாசினார்.மறுமுனையில் இருந்த ஜேக்கப் பெத்தேலை 5 ரன்களில் வீழ்த்தினார் பிரசித் கிருஷ்ணா.
105 ரன்களில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரூட்டையும், வெளியேற்றினார் பிரசித் கிருஷ்ணா. இதைத் தொடர்ந்து 76 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. 4-ம் நாள் ஆட்ட முடிவில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜேமி ஓவர்டன் 0 ரன்னுடனும், ஜேமி ஸ்மித் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தச் சூழலில்தான் 5-ம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்களை விரைந்து கைப்பற்றி ஓவல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.