லண்டன்: நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர். இதன் மூலம் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸில் அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகின் முதல் நிலை வீரரான 23 வயது ஜன்னிக் சின்னர் மற்றும் இரண்டாம் நிலை வீரரான 22 வயது கார்லோஸ் அல்கராஸ் இடையிலான இந்த ஆட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சின்னரை அல்கராஸ் வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், இம்முறை லண்டனில் துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சின்னர் பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஓபன் ஈராவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை சின்னர் படைத்தார். அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இத்தாலி வீரர் என்ற சாதனையையும் சின்னர் படைத்தார். விம்பிள்டனில் முதல் நிலை வீரர் இறுதி ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரை வீழ்த்துவது இது 11-வது முறை. இந்த வெற்றி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சின்னரின் 81-வது வெற்றியாக அமைந்தது.