புதுடெல்லி: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ், குடலிறக்க சிகிச்சைக்கு ஆலோசனை பெறுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார்.
33 வயதான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் 700 ரன்ளுக்கு மேல் வேட்டையாடி இருந்தார். இந்த தொடர் முடிவடைந்ததும் மும்பை பிரீமியர் லீக் டி 20 தொடரிலும் சூர்யகுமார் யாதவ் பங்கேற்றார். தொடர்ச்சியாக அவர், 3 மாதங்களாக பயணங்கள் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நெருக்கமான வட்டராங்கள் கூறும்போது, “சூர்யகுமார் யாதவுக்கு வலது பக்க கீழ் வயிற்றின் கீழ் பகுதியில் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா (குடலிறக்கம்) உள்ளது. இதற்காக ஆலோசனை பெறுவதற்காக அவர், இங்கிலாந்து சென்றுள்ளார். தேவைப்பட்டால், அங்கு அவர், அறுவை சிகிச்சை செய்து கொள்வார்” என தெரிவித்தன.
வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக இந்திய அணி எந்தவித டி20 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் தனது காயத்தை சரிசெய்து கொள்ளவும், பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் சிகிச்சை பிந்தைய வழிமுறைகளை கையாளவும் இதுவே சரியான நேரமாக இருக்கும் என சூர்யகுமார் யாதவ் நினைத்ததாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.