ஜெட்டா: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது கட்ட ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ‘சி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 42-வது நிமிடத்தில் கானர் மெட்கால்ஃபும், 48-வது நிமிடத்தில் மிட்ச் டியூக்கும் கோல் அடித்து அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ‘சி’ பிரிவில் 2-வது இடம் பிடித்து ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய அணி. உலகக் கோப்பை தொடருக்கு அந்த அணி தொடர்ச்சியாக 6-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆசியாவில் இருந்து இதுவரை 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு ஈரான், ஜப்பான், தென் கொரியா, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
3-வது கட்ட தகுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் 3 பிரிவுகளிலும் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ள ஓமன், கத்தார், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேஷியா ஆகிய 6 அணிகள்
4-வது கட்ட தகுதி சுற்றில் விளையாட உள்ளன. இந்த போட்டிகள் வரும் அக்டோபரில் நடைபெற உள்ளன. இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும். அதேவேளையில் இரு பிரிவிலும் 2-வது இடங்களை பிடிக்கும் அணிகள் 5-வது கட்ட தகுதி சுற்றில் 2 முறை நேருக்கு நேர் மோதும்.
இதில் வெற்றி பெறும் அணி ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு, ஒசியானா கால்பந்து கூட்டமைப்பு ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு அணிகள் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த 2 அணிகள் ஆகியவற்றுடன் இணைந்து கண்டங்களுக்கு இடையிலான பிளேஆஃப் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறும்.
பிரேசில் அணி தகுதி: 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான போட்டியில் நேற்று முன்தினம் இரவு பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் – பராகுவே அணிகள் மோதின. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
44-வது நிமிடத்தில் வினீசியஸ் ஜூனியர் கோல் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. பிரேசில் அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளன.