லக்னோ: சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரியா சரோஜுடன், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்த விழாவில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். லக்னோவிலுள்ள 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு ரிங்கு சிங், பிரியா சரோஜ் ஆகியோரை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரவீண் குமார், பியூஷ் சாவ்லா, உத்தர பிரதேச மாநில ரஞ்சி அணியின் கேப்டன் அர்ஜுன் ஜுயால், சமாஜ்வாதி எம்.பி.க்கள் ஜெயா பச்சன், டிம்பிள் யாதவ், இக்ரா ஹசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தற்போது ரிங்கு சிங் விளையாடி வருகிறார்.