சேலம்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. ராஜ் குமார் 24 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். வசீம் அகமது 32, சஞ்ஜய் 27, சுஜய் 25 ரன்கள் சேர்த்தனர்.
169 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 39, பாலசுப்பிரமணியன் சச்சின் 38, மாதவ பிரசாத் 22 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3, ராஜ் குமார் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
திருச்சி அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கோவை அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை பதிவு செய்தது.