சுவோன்: கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கொரியாவில் உள்ள சுவோன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், இந்தோனேஷியாவின் சிகோ அவுரா ட்வி வார்டோயோவுடன் மோதினார். இதில் பிரனாய் முதல் செட்டில் 5-8 என பின்தங்கிய நிலையில் இருந்த போது காயம் அடைந்தார்.
வலது விலா எலும்பு பகுதியில் காயம் அடைந்த அவர், சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினார். ஆனால் அவர், அசவுகரியமாக உணர்ந்ததால் போட்டியில் இருந்து விலகினார். அப்போது சிகோ அவுரா ட்வி வார்டோயோ 16-8 என முன்னிலையில் இருந்தார். பிரனாய் விலகியதால் சிகோ அவுரா ட்வி வார்டோயோ 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 18-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் சு லி யாங்கிடம் தோல்வி அடைந்தார். கிரண் ஜார்ஜ் 14-21, 22-20, 14-21 என்ற செட் கணக்கில் போராடி முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீயனிடம் வீழ்ந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா 16-21, 15-21 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் புத்ரி வர்தானியிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மோஹித் ஜக்லான், லக் ஷிதா ஜக்லான் ஜோடி 7-21, 14-21 என்ற செட் கணக்கில் யுஷி ஷிமோகாமி, சயாகா ஹோப்ரா ஜோடியிடம் வீழ்ந்தது.