லக்னோ: இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்களும், இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களும் எடுத்தன. 226 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 46.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
412 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 44, மானவ் சுதார் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியா ‘ஏ’ அணி 91.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கே.எல்.ராகுல் 210 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 176 ரன்களும், நித்திஷ் குமார் ரெட்டி 16 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக மானவ் சுதர் 5 ரன்களில் வெளியேறினார். சாய் சுதர்சன் 172 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். துருவ் ஜூரெல் 66 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. முதல் போட்டி டிராவில் முடிவடைந்திருந்தது.