இன்றைய ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன் படி முதலில் பேட்டிங் இறங்கி குஜராத் அணியின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஷுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் விளாசி அசத்தினார். சாய் சுதர்ஷன் 23 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.
அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் 64 ரன்களுடன் அதிரடி காட்டினார். தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் 21, ஷாருக்கான் 6, ராஹுல் டிவாடியா 6 என 20 ஓவர் முடிவில் 224 ரன்கள் எடுத்தது குஜராத் அணி.
225 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் இம்பாக்ட் பிளேயராக இறங்கிய டிராவிஸ் ஹெட் 20 ரன்களுடன் வெளியேறினார். மறுமுனையில் ஆடிய அபிஷேக் சர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். ஆனால் இதன் பிறகு இறங்கிய வீரர்கள் யாரும் பெரியளவில் ஸ்கோர் செய்யவில்லை. இஷான் கிஷன் 13, கிளாசன் 23, அனிகெத் வர்மா 3, நிதிஷ் குமார் ரெட்டி 21, பேட் கம்மின்ஸ் 19 என 20 ஓவர்களுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஹைதராபாத் அணி. இதன் 38 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.
குஜராத் அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்தாக வேண்டும்.