சாங்சோவ்: சீனாவின் சாங்சோவ் நகரில் சீனா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டோமோகா மியாசாகியுடன் மோதினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து 21-15, 8-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான சிந்து, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த உன்னதி ஹூடாவுடன் மோதுகிறார். உன்னதி ஹூடா முதல் சுற்றில் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கென்யா மிட்சுஹாஷி, ஹிரோகி ஒகாமுரா ஜோடியை தோற்கடித்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சாட்விக், ஷிராக் ஜோடி தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னாண்டோ, பகாஸ் மவுலானா ஜோடியை எதிர்கொள்கிறது.