சென்னை: இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் குறிக்கோளுடன், இந்தியாவில் பல்வேறு மண்டலங்களில் அகாடமிகளை அமைக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் ஃபிபாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அகாடமிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் வரும் ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் 2012-ம் ஆண்டு பிறந்தவர்களாகவும் வீராங்கனைகள் 2010 மற்றும் 2011-ல் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். வீரர்கள் தேர்வு 29-ம் தேதி காலை 7 மணிக்கும், வீராங்கனைகள் தேர்வு 30-ம் தேதி காலை 7 மணிக்கும் நடைபெறுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.