இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிமுக்கியத்துவமான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜுரெல் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா ஏ அணிக்காக அறிவிக்கப்பட்ட 20 வீரர்கள் பட்டியல்: அபிமன்யூ ஈஸ்வரன் (கேப்டன்), மானவ் சுதர், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன், சர்பராஸ் கான், கருண் நாயர், முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, துருவ் ஜுரெல், ஆகாஷ் தீப், ஹர்ஷ் துபே, நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா, ஷுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் காம்போஜ், சாய் சுதர்ஷன், இஷான் கிஷன், கலீல் அகமது.
இந்தியா ஏ அணி இங்கிலாந்தில் ஏ அணியுடன் 2 முதல்தரப் போட்டிகளில் ஆடவிருக்கிறது. இதில் 2-வது போட்டியில் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் அணியுடன் இணைவார்கள். கூடிய மட்டும் அனுபவத்துக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பார்மில் இருக்கும் வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது.
இந்த இந்தியா ஏ அணியில் வேகப்பந்து வீச்சாளார்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, காம்போஜ், கலீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே, ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் ஸ்பின் தரப்பில் மானவ் சுதர், ஹர்ஷ் துபே, ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் இந்த முறை பும்ரா, ஷமி, சிராஜ், ஆகியோருடன் பிரசித் கிருஷ்ணாவும் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார். பிரசித் கிருஷ்ணா ஒரு அற்புதமான பவுலராக பரிணாமம் அடைந்துள்ளார்.
பேட்டிங்கில் அநீதி இழைக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட கருண் நாயருக்கு மீண்டும் இந்திய அணியில் இணைய ஓர் அருமையான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்று வாட்டர் பாயாக மாற்றப்பட்ட சர்பராஸ் கானுக்கும் ஒரு நல்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஏமாற்றமான மிஸ்ஸிங் ஸ்ரேயஸ் அய்யர். அவர் கேப்டன்சி வீரர், ரிக்கி பாண்டிங், கம்பீர் கை வண்ணத்தில் அவர் நல்ல முதிர்ச்சியான கேப்டனாக உருவெடுத்துள்ளார். எனவே ஷுப்மன் கில் முதலில் பேட்டிங்கில் முன்னேற்றம் காணட்டும் என்று விட்டு விட்டு ஸ்ரேயஸ் அய்யரிடம் கேப்டன்சி கொடுப்பதும் கோலியின் இடத்தில் அவரை இட்டு நிரப்புவதும் சாலச்சிறந்தப் பொருத்தமாகும். ஆனால் ஏ அணியில் ஸ்ரேயஸ் அய்யர் இடம்பெறவில்லை. நிச்சயம் இது அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.
அதே போல் கருண் நாயரை முன் வைத்து சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் செய்யலாம். இப்படிச் செய்தால் சர்பராஸ் கான் ஆதரவு விமர்சனங்களைத் தவிர்த்து விடலாம் என்று கம்பீர் யோசிக்கலாம். ஏனெனில் கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் இப்போது ஸ்டார் அதோடு இங்கிலாந்து கவுண்ட்டி அணியான நார்த்தாம்ப்டன் ஷயருக்காக ஆடி 2023, 2024 சீசன்களில் ஆடி 10 போட்டிகளில் 736 ரன்களை 56.61 என்ற சராசரியில் எடுத்துள்ளதும் கருண் நாயர் பக்கம் தராசு சாய்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் போட்டி மே 30ம் தேதியும், 2வது போட்டி ஜூன் 6ம் தேதியும் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் முடிந்தவுடன் இந்தியா ஏ அணியினர் சீனியர் இந்திய அணியுடன் 4 நாள் போட்டி ஒன்றில் ஆடுகின்றனர், இது ஜூன் 13ம் தேதி நடைபெறுகிறது.