மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இலங்கையில் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முழு அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டுக்கு பின்னர் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, இலங்கையுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 26-ம் தேதி இதே மைதானத்தில் வங்கதேச அணியுடனும் மோதுகிறது இந்திய அணி. இதையடுத்து அக்டோபர் 5-ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி.
இதன் பின்னர் இந்திய அணி அக்டோபர் 9-ம் தேதியும் தென் ஆப்பிரிக்காவுடனும், அக்டோர் 12-ம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த இரு ஆட்டங்களும் விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகின்றன.
தொடர்ந்து அக்டோபர் 19-ம் தேதி இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்துடனும், 23-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்துடனும் இந்திய அணி மோதுகிறது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 1-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. முதல் அரை இறுதி போட்டி அக்டோபர் 29-ம் தேதி குவாஹாட்டி அல்லது கொழும்பு நகரில் நடைபெறும். 2-வது அரை இறுதி 30-ம் தேதி பெங்களூரு அல்லது கொழும்பு நகரில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 2-ம் தேதி பெங்களூரு அல்லது கொழும்பு நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி இருந்தால் மட்டுமே கொழும்பு நகரில் போட்டி நடைபெறும். இல்லையென்றால் இந்தியாவிலேயே நடத்தப்படும்.