சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள மகாராஷ்டிரா – தமிழ்நாடு மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. மகாராஷ்டிரா அணி சார்பில் 22-வது நிமிடத்தில் ரோகன் பாட்டீலும், தமிழ்நாடு அணி தரப்பில் 42-வது நிமிடத்தில் சோமன்னாவும் கோல் அடித்தனர்.
‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கர்நாடகா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தை தோற்கடித்தது. கர்நாடக அணி சார்பில் ராகுல் (45-வது நிமிடம்), பரத் மகாலிங்கப்பா (52-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மத்திய நேரடி வரிகள் வாரியம் அணி தரப்பில் 56-வது நிமிடத்தில் பிரனம் கவுடா கோல் அடித்தார். இன்று (11-ம் தேதி) நடைபெறும் ஆட்டங்களில் இந்திய ராணுவம் – தமிழ்நாடு, மகாராஷ்டிரா – என்சிஒஇ (போபால்), ஐஓசி – மத்திய நேரடி வரிகள் வாரியம் அணிகள் மோதுகின்றன.