அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் ரசிகர்கள் இதை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை பெறுவதற்கு முன்பு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்தது: “இந்த தருணம் எனக்கும் விராட் கோலிக்கும் மற்றும் இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும் சிறப்பானது. குவாலிபையர்-1 ஆட்டத்தின் போது எங்களால் பட்டம் வெல்ல முடியும் என உறுதியாக நம்பினோம்.
இந்த ஆடுகளத்தில் 190 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் திட்டத்துக்கு ஏற்ப பந்து வீசி இருந்தனர். குறிப்பாக க்ருனால் பாண்டியா ஒரு விக்கெட் டேக்கிங் பவுலர். அழுத்தம் கூடும் போதெல்லாம் அவரை பந்து வீச அழைப்பேன்.
விராட் கோலி உள்ள அணியை வழிநடத்தும் வாய்ப்பு என்பது நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என எல்லோரது ஆதரவும் இருந்தது. ரசிகர்களுக்காக ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘ஈ சாலா கப் நம்து’” என்றார்.