இந்திய அணியின் ஃபீல்டிங்தான் லீட்ஸ் டெஸ்டில் அணியையே தோல்விக்கு இட்டுச் சென்றது. ஆனால், இந்திய அணியின் பெரிய பிரச்சினை ஃபீல்டிங் அல்ல என்று புதிர் போடுகின்றார் கிரெக் சாப்பல்.
லீட்ஸ் டெஸ்டில் முக்கியக் கட்டங்களில் பென் டக்கெட், ஹாரி புரூக் என இந்திய அணி கேட்ச்களை விட்டு வாய்ப்புகளை அவர்களுக்குச் சாதகமாக்கியதும் ஆஸ்திரேலியா – மே.இ.தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலும் மே.இ.தீவுகள் சுமார் 7-8 கேட்ச்களை விட்டு ஜெயிக்க வேண்டிய மேட்சைத் தோற்றது. ஆனால் கிரெக் சாப்பல், இந்தியாவின் பிரச்சினை ஃபீல்டிங் அல்ல என்கிறார்.
முன்னணி ஆங்கில கிரிக்கெட் இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது தொடர்பாகக் கூறியது: ‘ஸ்லிப்பில் நிற்பவர்கள் பந்து நம்மிடம் வரும், வர வேண்டும், எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்று மனதளவில் தயார்நிலையில் இருக்க வேண்டும். அதை விடுத்து நம்மிடம் வராது என்றோ, நம்மிடம் கேட்ச் வந்து விடக்கூடாது என்றோ எடுத்த எடுப்பில் நினைத்துவிட்டால் அவர் அங்கு நிற்கத் தகுதியற்றவர் ஆகிறார்.
கேட்சிங்கில் நிறைய இருக்கிறது. நான் நிற்கும்போது பந்து வீச்சாளரின் கையில் இருந்து பந்து வருவதிலிருந்து பந்தைப் பின்தொடர்வேன், பந்து குட் லெந்தாக இருந்தால் எட்ஜ் நோக்கி கவனம் செல்லும். ஃபுல் லெந்த் பந்தில் எட்ஜ் ஆனால் இடுப்புக்குக் கீழ்தான் கேட்ச் வரும். கை எப்படி இருக்க வேண்டும் என்பதில் சில தந்திரங்கள் உள்ளன.
தாழ்வான கேட்ச்களுக்கு விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும், ஷார்ட் பிட்ச் பந்து என்றால் மட்டை விளிம்பில் பட்டு நம் இடுப்புக்கு மேல் கேட்ச் வரும் போது விரல்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இதிலும் சில வேளைகளில் நிர்ணயம் செய்து விட முடியாது. நெஞ்சுக்கு வரும் என்று நினைப்போம் அது இடுப்புக்கு மேல் இருக்கும், ஆனால் நெஞ்சு வரை வராமல் ஒரு இடைப்பட்ட உயரத்தில் வரும்போது நாம் கணிப்பதில் சிக்கல் ஏற்படும்.
பான்டிங் உடலுக்கு நேராக வரும் கேட்சிற்கு உடலை சற்றே கீழே குனிந்து கையை விரித்து கேட்ச் எடுப்பார். மார்க் வாஹ் ஸ்லிப்பில் அபாரமான ஃபீல்டர். ஸ்லிப் ஃபீல்டிங்கில் அதீத கவனம் தேவை. கல்லியில் ஃபீல்டிங் செய்வது கடினம். ஏனெனில் பந்துகள் வேகமாக, எதிர்பாராத கோணங்களில் வரும். இதற்குக் கடுமையான ரிஃப்ளேக்ஸ் வேண்டும். கூர்மையான கணிப்பும் அவசியம். உயரமான ஃபீல்டர்கள் கல்லியில் நல்ல ஃபீல்டிங் செய்வதைப் பார்த்திருக்கிறேன், முன்பு ஜொயெல் கார்னர், இப்போது கேமரூன் கிரீன்.
இந்திய அணியின் பிரச்சனை என்ன? லீட்ஸ் டெஸ்ட்டின்போது பார்த்தேன். 30 யார்டிலிருந்து கடுமையான த்ரோக்கள் மூலம் கேட்ச் பிராக்டீஸ் செய்கின்றனர். மேட்சில் நடப்பது போல் அப்படியே நிழல் படம் போல் உருவாக்க வேண்டிய தேவையே இல்லை. ஏனெனில், மிடில் ஆஃப் த பேட்டிலிருந்து ஒரு சில எட்ஜ்களே மேட்ச்களில் வரும். எதார்த்த நிலையை பயிற்சி பிரதிபலிக்க வேண்டும். ரிஃப்ளெக்ஸ், ரிதம் இதுதான் முக்கியம்.
லீட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அதிக கேட்ச்களை விட்டது. இதில் குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜாவும் அடங்குவர். இருவரும் பொதுவாக பாதுகாப்பான ஃபீல்டர்களே. இவர்கள் விட்ட கேட்ச் டெக்னிக் தவறினால் அல்ல, பந்து ஒட்டவில்லை. கையில் அடிப்பட்டதால் ஜெய்ஸ்வால் நம்பிக்கை குறைந்தவராகக் காணப்பட்டார். அவர் கேட்சை எதிர்பார்க்காமல் வரும் கேட்சைப் பிடிக்க வேண்டும் என்றுதான் இருந்தார். ஓடி வந்து முன்னால் டைவ் அடித்து கேட்ச் ஒன்றை விட்டார், அது மிக மிகக் கடினமான கேட்ச்.
ஆனால், இந்தியா லீட்ஸ் டெஸ்ட்டில் தோற்றதற்கு கேட்சிங் காரணமல்ல. மிக முக்கியமாக ஹாரி புரூக்கிற்கு 2-வது இன்னிங்சில் அவுட் ஆன போது நோ-பால் ஆனது. இதை விட பவுலிங்கில் வெரைட்டியே இல்லை. பும்ரா நீங்கலாக மற்றவர்கள் ஒரே மாதிரிதான் வீசுகிறார்கள். ஒரே ஆங்கிளில்தான் வீசுகின்றனர். ஆகவே பும்ரா இல்லாமல் இந்திய பவுலிங்கில் வெரைட்டி சாத்தியமில்லை. பும்ரா ஆடவில்லையா, இடது கை பவுலர் அர்ஸ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்வை நான் லெவனில் எதிர்பார்க்கிறேன். ஷேன் வார்னுக்குப் பிறகு சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ்தான்.
இரண்டு பந்துகள் தொடர்ச்சியாக அபாயகரமான இடத்தில் பிட்ச் ஆனதாக இந்திய பவுலிங்கில் அந்த டெஸ்ட்டில் எனக்கு நினைவில் இல்லை. ஒன்று ஃபுல் லெந்த் அல்லது ஷார்ட் பிட்ச் அல்லது வைடாக வீசுகின்றனர். இப்போதைக்கு இங்கிலாந்து பேட்டர்களுக்கு என்ன சவுகரியமாகப் போய் விட்டது என்றால் பும்ராவை ரிஸ்க் எடுக்காமல் எச்சரிக்கையாக ஆடிவிட்டால் போதும், மற்றவர்களை அடித்து விடலாம் என்பதே. ஜடேஜா இங்கிலாந்து பிட்ச் நிலைமைகளில் முன்னணி ஸ்பின்னர் இல்லை.
இந்தத் தொடரில் தோல்வியை வெற்றிக்குத் திருப்ப வேண்டுமெனில் அணித் தேர்வு மிக முக்கியம். டாப் ஆர்டர் சரிந்து விட்டால் என்ற அச்சத்தில் கொஞ்சம் பவுலிங் போடும் ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்வது தேவையில்லாதது. டாப் 6 பேட்டர்கள் உறுதியாக ரன்களைக் குவித்தால் கேப்டனுக்கு எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பு கிட்டும். அதற்கான பந்து வீச்சு வரிசையும் வேண்டும். அணித் தேர்வுக் குழுவினருக்கு இப்போது பணி காத்திருக்கிறது, அவர்களும் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டும்’ என்று அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் கிரெக் சாப்பல்.