புதுடெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி எனும் மகத்தான வீரரை இந்திய அணியினர் மிஸ் செய்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து விட்டது இதற்கு காரணம்.
இந்நிலையில், இது நடந்தால் விராட் கோலி தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவார். ஏனெனில், அவர் அந்த அளவுக்கு இந்த ஃபார்மெட்டை நேசிக்கிறார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நம்புகிறார்.
இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் கிளார்க் பேசியுள்ளார். “இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்தால் இது நடக்கலாம். தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டு அவர் மீண்டும் விளையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன்.
அதோடு கேப்டன், தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்கள் என எல்லோரும் அவரை அழைத்தால், அந்த அழைப்பை கோலி மறுக்க மாட்டார் என்று நான் கருதுகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கிறார். அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்த அவரது பேச்சு அப்படி இருந்தது. அதோடு இந்த ஃபார்மெட்டில் அவரது பேஷன் அசலானது” என அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கோலி பேசியது என்ன? – ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பை வென்ற சில நிமிடங்களில் அகமதாபாத் மைதானத்தில் மேத்யூ ஹேடன் கோலியை பேட்டி கண்டார். “இந்த தருணம் என் கரியரில் சிறந்த தருணங்களில் ஒன்று. இருந்தாலும் இது டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஐந்து நிலை (ரேங்க்) பின்தங்கி உள்ளது. எல்லோரிடத்திலும் மதிப்பை பெற வேண்டுமென்றால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தேர்வு செய்ய வேண்டும்” என கோலி சொல்லி இருந்தார்.